நெல்லை அல்வா..ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா..ஆக. 3 முதல் எஸ்இடிசி பஸ்களில் பார்சல்..கட்டணம் எவ்வளவு?
சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு பஸ்களில் பார்சல் சேவையை பயன்படுத்துவதற்கு அருகில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பித்து பயனடையலாம்.
சென்னை: எஸ்இடிசி பேருந்துகளில் உள்ள லக்கேஜ் பகுதிகளை வாடகைக்கு விடும் திட்டம் ஆகஸ்டு 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு மாதம் முழுவதும் பஸ்களில் உள்ள சரக்கு வைக்கப்படும் பெட்டிகளை மாத வாடகை அல்லது தினசரி வாடகை செலுத்தி உபயோகித்து கொள்ளலாம்.
தமிழக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமாக 1,110 பஸ்கள் உள்ளன. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் வகையில் பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப்படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விடும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில், குறுகிய நேரத்தில் அரசு விரைவு பஸ்களை விரைவு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகளின் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.
பார்சல் சேவை அறிமுகம்
குறைந்த அளவிலான பொருள்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவில் அனுப்புவதற்கு ஏதுவாக பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நாள்தோறும் அனுப்ப வேண்டிய பொருள்களை 2 ஊர்களுக்கு இடையே அனுப்பும் வகையில் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஆகஸ்ட் 3 முதல் அமல்
இந்த சேவை வருகிற ஆகஸ்டு 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு மாதம் முழுவதும் பஸ்களில் உள்ள சரக்கு வைக்கப்படும் பெட்டிகளை மாத வாடகை அல்லது தினசரி வாடகை செலுத்தி உபயோகித்து கொள்ளலாம்.
எப்படி விண்ணப்பிக்கலாம்
சரக்கு பெட்டிகளில் புகழ்பெற்ற நெல்லை அல்வா, ஊத்துக்குளி வெண்ணெய், தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோவில் நேந்திரம் பழம் சிப்ஸ் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரபலமான பொருட்கள் அனைத்தையும் இதன் மூலம் எளிதாக அனுப்பலாம். சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்துவதற்கு அருகில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பித்து பயனடையலாம்.
கட்டணம் எவ்வளவு
பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 80 கிலோ எடை கொண்ட பொருட்களை அனுப்புவதற்கு தினசரி மற்றும் மாத கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் திருச்சிக்கு தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, மதுரைக்கு தினசரி ரூ.300, மாதம் ரூ.9 ஆயிரம், கோவைக்கு தினசரி ரூ.330, மாதம் ரூ.9 ஆயிரத்து 900, சேலத்திற்கு தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, திருநெல்வேலிக்கு தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, தூத்துக்குடிக்கு தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்துக்கழகம்
திண்டுக்கல் மற்றும் காரைக்குடிக்கு தினசரி ரூ.270, மாதம் ரூ.8 ஆயிரத்து 100, ஓசூருக்கு தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, நாகப்பட்டினத்திற்கு தினசரி ரூ.240, மாதம் ரூ.7 ஆயிரத்து 200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. செங்கோட்டைக்கு தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, நாகர்கோவிலுக்கு தினசரி ரூ.420, மாதம் ரூ.12 ஆயிரத்து 600. கன்னியாகுமரிக்கு தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, மார்த்தாண்டத்திற்கு தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500 என கட்டணம் நிர்யணம் செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினார்கள்.