சென்னையில் காற்றுடன் பெய்த கனமழை... சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்
சென்னை, ஆவடி உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
சென்னை: சென்னையில் கனமழை காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அடையாறு பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
Recommended Video
வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், நிலத்தை கடக்காமல் திசைமாறி கடலை நோக்கிச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை பரவலாக மழை பெய்துள்ளது.

தொடர்ந்து தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவு பத்து மணிக்கு மேல் சூறவாளியுடன் மழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்று வீசியதால் தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதேபோல தமிழகத்தின் டெல்டா மாவட்டங்ளிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இதில் சென்னையை பொறுத்தவரை கனமழை காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அடையாறு, காந்திமண்டபம், கோட்டூர்புரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. கிட்டத்தட்ட 30 நிமிடம் வரை தாமதமானதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னையில் 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 5 செ.மீ. மழை, பதிவாகியுள்ளது. திருப்பத்தூர், பல்லம்பாடு, ஆலங்காயம், விரிஞ்சிபுரம், ஆம்பூர், மேலாலத்தூர், ஆத்தூர், கரியகோவிலில் தலா 3 செ.மீ. மழையும், தேவிமங்கலம், சமயபுரம், துவாக்குடி, எண்ணூர், கேளம்பாக்கம், திருக்காட்டுப்பள்ளி, வெட்டிக்காடு, திருக்கழுக்குன்றம், பெரம்பலூர், குடியாத்தம், திருவையாறு, வாணியம்பாடி, கருங்குளத்தில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மழையால் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டாலும் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications