டக்குன்னு "மருந்து" கண்டுபிடித்த ராம்தேவ்.. சித்த மருத்துவத்துக்கும் அதே "சப்போர்ட்" கிடைக்குமா?
நாட்களில் தொற்றை குணப்படுத்த முடியும் என்று ராம்தேவ் அறிவித்துள்ளார்
சென்னை: ராம்தேவ் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டார்.. அதற்குப் பெயர் கொடோனில்.. இதுதான் இப்போது வட மாநில மீடியாக்களின் பரபரப்பு பேச்சாக உள்ளது. இந்த நேரத்தில்தான் நம்ம சித்த மருத்துவர்களின் போராட்டம் நமது மனக் கண்களில் வந்து போகிறது.
இந்த கொரோனா ஒரு புது வித வைரஸ்.. உலகம் காணாதது.. எதிர்கொள்ளாதது.. அதனால் இதன் அறிகுறிகளையே இன்னும் கண்டுபிடித்து முடிக்காத நிலையில், இதற்கு மருந்து என்ன என்று தெரியவில்லை.. தடுப்பு மருந்து, குணப்படுத்தும் மருந்து, என இப்படி எதுவுமே கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்த நேரத்தில்தான், நாம் ஏன் கையைப் பிசைய வேண்டும். நம்மிடம்தான் நமது முன்னோர்கள் அளித்த அருமையான மருத்துவம் இருக்கிறதே.. எங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்று எழுந்து வந்தனர் நமது சித்த மருத்துவர்கள். நமக்கு சித்த மருத்துவம் என்ற அற்புத வரம் உள்ளது.. மிகசிறந்த பொக்கிஷமும் அதுவே.. அதனால் தமிழகத்தில் பல சித்த மருத்துவர்கள், தங்களால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
3 டூ 15 நாள்தான்.. கொரோனா ஓடிரும்.. குணமாய்ருவீங்க.. இதுதான் மருந்து.. ராம்தேவின் பதஞ்சலி அறிவிப்பு!
கோரிக்கை
சொன்னதோடு நிற்கவில்லை.. பல்வேறு வழிமுறைகளையும் விலாவாரியாக குறிப்பிட்டு இத்தனை வாய்ப்புகள் உள்ளன. ஆய்வுகளை அதிகரியுங்கள் என்றும் கோரிக்கை விடுத்தனர். இன்னும் சிலரோ மருந்துகளே ரெடி என்றும் கூறி வயிற்றில் பால் வார்த்தனர். ஆனால் எல்லாமே ஐசிஎம்ஆரின் அனுமதியை இதுவரை பெறவில்லை. அந்த அனுமதி கிடைக்காமல் இந்த மருந்துகளை பயன்படுத்த முடியாது என்பதால் சித்த மருத்துவர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.
ஐசிஎம்ஆர்
ஐசிஎம்ஆர் இதுவரை எந்த பதிலையும் தராமல் உள்ளது. இதுதொடர்பாக ஹைகோர்ட்டுகளில் வழக்கும் போட்டுள்ளனர். நேற்று கூட ஹைகோர்ட் மதுரை கிளை, ஏன் சித்த மருத்துவத்தை நம்ப மாட்டீர்களா, சித்த மருத்துவத்தை ஆய்வு செய்வதில் மத்திய மாநில அரசிற்கு என்ன தயக்கம்? கபசுர குடிநீரை பரிந்துரைக்கும் அரசிற்கு சித்த மருத்துவத்தை கணக்கில் எடுத்துக் கொள்வதில் என்ன பிரச்சனை?" என்று கேள்வி கேட்டது. இன்று அந்த அரசு சித்த மருத்துவரை தனது கண்டுபிடிப்பை ஆய்வுக்கு சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
வடக்கு
நிலைமை இப்படி இருக்க வடக்கில் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ராம்தேவ் அறிவிக்கிறார். மருந்தை எடுத்துக் காட்டுகிறார். 100 சதவீத உத்தரவாதம் என்கிறார். 3 நாளில் குணமாகும்.. அதிகபட்சம் 15 நாள்தான் என்கிறார். சோதனையில் வெற்றி என்றும் சொல்லி அதிர வைத்துள்ளார். எப்போது சோதனை நடத்தப்பட்டது என்றே தெரியவில்லை. இதற்கு ஐசிஎம்ஆர் அனுமதி உள்ளதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
அன்புமணி ராமதாஸ்
அது இருக்கட்டும். நம்ம ஊர் சித்த மருத்துவர்கள் பலர் சொன்னது குறித்து உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை. சித்த மருத்துவத்தை ஏன் அதிக அளவில் பயன்படுத்த நாம் முன்வராமல் இருக்கிறோம் என்பதும் புரியவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூட சென்னை தேசிய சித்த மருத்துவமனையில் குணப்படுத்த ஆரம்பித்துள்ளனர். அவர்களிடம் அதிக அளவிலான நோயாளிகளை ஒப்படையுங்கள் என்று தமிழக அரசுக்கு கோரிக்கையே வைத்துள்ளார். அதுவும் ஏற்கப்பட்டதா என்று தெரியவில்லை.
ராம்தேவ்
7 நாட்களில் குணமடையும் என்று பகிரங்கமாக ராம்தேவ் அறிவிக்கிறார் என்றால் இதற்கு ஐசிஎம்ஆர் அனுமதி பெற்றுவிட்டாரா? ஒருவேளை அவர் அனுமதி பெற்றிருந்தால் தமிழகத்துக்கு ஏன் கிடைக்கவில்லை.. அல்லது ஐசிஎம்ஆர் அனுமதியே இல்லாமல் இவராகவே அறிவித்துள்ளாரா என்று தெரியவில்லை. டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களில் இதற்கான டெஸ்ட்கள் நடந்ததாம்.. ஆய்வு நடத்திய 3 நாட்களில் 69 சதவீத நோயாளிகள் குணமடைந்துவிட்டனர், அதாவது 7 நாட்களில் 100 சதவீத நோயாளிகள் குணமடைந்துவிட்டனர் என்று மார்தட்டி சொல்கிறார் ராம்தேவ்.
கேள்விகள்
ஏற்கனவே மாற்று மருந்துகள் பற்றி உலக சுகாதார அமைப்பான ஹூ (WHO) ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ராம்தேவ் மருந்தை எப்படி மத்திய அரசு அனுமதிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. அலோபதிக்கான சார்பு நிலை பார்வையை அரசு எடுக்கிறதென்றால், இதற்கு பின்னணியில் உள்ள வணிக அமைப்புகள் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டும்... ராம்தேவ் மருந்து கண்டுபிடித்ததை மத்திய அரசு எப்படி அணுகுகிறது என்பதும் இப்போதைய எதிர்பார்ப்புதான்.. காரணம் இதை வைத்துத்தான் சித்த மருத்துவர்களின் ஏக்கம் தீருமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பதும் உள்ளது!!