இருமுடி தாங்கி ஒருமனதாகி குருவெனவே வந்தோம் - சபரிமலை யாத்திரை
சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடி சுமந்து செல்வார்கள். அந்த இருமுடியில் பக்தர்கள் என்னென்ன கொண்டு செல்வார்கள் என்று பார்க்கலாம்.
சென்னை: ஐயப்பனை காண இருமுடி கட்டி அதில் நெய் தேய்காய் கொண்டு செல்வார்கள் பக்தர்கள். காலம் காலமாக ஐயப்பனுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி எடுத்துச்செல்வது ஏன் என்று அறிந்து கொள்வோம். இருமுடியை முதன்முதலில் தலையில் சுமந்து சென்றது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. நெய்யபிஷேக பிரியன் ஐயப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டு செல்வது ஏன் என்று பார்க்கலாம்.
சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் தேங்காய்க்குள் நெய்யை ஊற்றி அதை இருமுடியாக கட்டி எடுத்துக்கொண்டு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என பாடிக்கொண்டு சரணகோஷம் முழங்க சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்வார்கள்.
சபரிமலை ஐயப்பன் சிவன் விஷ்ணுவின் அம்சம்தான். இதனை அனைவரும் உணரும் வகையிலேயே முக்கண் கொண்ட சிவ அம்சமான தேங்காயில் விஷ்ணுவின் அம்சமான பசு நெய் ஊற்றி எடுத்துச்செல்கின்றனராம்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 61 போலீஸாருக்கு கொரோனா பாதிப்பு
சிவன் விஷ்ணுவின் அவதாரம்
சிவனுக்கும் மோகினி ரூபமான விஷ்ணுவுக்கும் மகனாக அவதரித்தவர் ஐயப்பன். பம்பா நதிக்கரையில் பந்தள அரசன் ராஜசேகரனால் கண்டெடுக்கப்பட்டார். பிள்ளை இல்லாத தனக்கு கடவுளாக கொடுத்த பிள்ளை என்று மகிழ்ந்தார் பந்தள மன்னன். கழுத்தில் மணியோடு பிறந்தவருக்கு மணிகண்டன் என்று பெயர்சூட்டி வளர்த்தார் பந்தள மன்னன்.
வனத்திற்கு புறப்பட்ட மணிகண்டன்
மணிகண்டன் வந்த நேரம் செல்வ செழிப்பு அதிகரித்தது, பந்தள ராணிக்கும் குழந்தை பிறந்தது. நாட்கள் செல்லச் செல்ல விதி அரசி ரூபத்தில் விளையாடியது. பந்தள மன்னனின் மனைவி வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யாக கூறி நடித்தாள். அரசவை வைத்தியரை கைக்குள் போட்டுக்கொண்டு வயிறு வலிக்கு புலிப்பால் குடித்தால் மட்டுமே நோய் தீரும் எனக் கூற வைத்தாள். தாய்க்கு புலிப்பால் கொண்டு வர வனத்திற்கு புறப்பட்டார் சிறுவனாக இருந்த மணிகண்டன்.
உணவு கொடுத்த தந்தை
தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்ண எடுத்துச் செல்லும் உணவுகள் பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினார். அதேசமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம் போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் கட்டிக் கொடுத்தார்.
இருமுடி தாங்கும் பக்தர்கள்
இருமுடிகளையும் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தள மன்னன் செல்லும்போது ஐயப்பனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்வார். நெய்யில் செய்த பலகாரங்களைக் கொண்டு செல்வார்.
நெய் பலகாரங்கள்
நெய்யை தேங்காய்க்குள் ஊற்றிக்கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். பந்தள மன்னன், ஐயப்பனை காண நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும். எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இதனை நினைவு படுத்தும் வகையிலேயே சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடிகட்டி செல்லும் போது நெய் தேங்காய் கொண்டு செல்வது முக்கியமான ஒன்றாகிவிட்டது. நெய் தேங்காய் கொண்டு போய் அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து விட்டு அதை பிரசாதமாக வீட்டிற்குக் கொண்டு செல்கின்றனர்.