அன்று ஸ்டாலின் விடுத்த அழைப்பு! மறக்காமல் முதலமைச்சர் இல்லம் தேடிச் சென்ற சிங்கப்பூர் அமைச்சர்!
சென்னை: சென்ற ஆண்டு சிங்கப்பூர் பயணத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டு சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம் முதலமைச்சர் இல்லம் தேடிச் சென்று சந்தித்து பேசியிருக்கிறார். இச்சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு;
''சென்ற ஆண்டு சிங்கப்பூர் பயணத்தின்போது நான் விடுத்த அழைப்பை ஏற்று, அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்கத் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள சிங்கப்பூர் நாட்டின் மாண்புமிகு சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம் அவர்களை எனது இல்லத்தில் வரவேற்று மகிழ்ந்தேன்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-இன் வெற்றியைத் தொடர்ந்து நடைபெற்றுள்ள எங்களின் இந்தச் சந்திப்பு கல்வி - பண்பாடு - தொழில் எனப் பல்வேறு தளங்களில் வளர்ந்து, நாட்டுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் 'தமிழ் வெல்லும்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இரண்டு நாட்கள் நடைபெறும் "அயலகத் தமிழர் தினம் 2024" விழாவை இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அயலகத் தமிழர் தின விழாவின் இரண்டாவது நாளான நாளை (12.1.2024) முதலமைச்சர் ஸ்டாலின் அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி, 'எனது கிராமம்' என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றவுள்ளார். இவ்விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள வருகை தந்துள்ள சிங்கப்பூர் நாட்டின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications