6 தமிழர் விடுதலை: ஆளுநர் ரவிக்கு கமல்ஹாசன் குட்டு! தமிழக அரசு முடிவுகளில் இனி இடையூறு செய்யாதீங்க!
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளனைப் போல 6 தமிழர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்தாவது மாநில அரசின் முடிவுகளில் இடையூறு செய்வதை இனியாவது ஆளுநர் ஆர்.என்.ரவி. நிறுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் 7 தமிழர்கள் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர். 30 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின்னர் 7 தமிழரை விடுதலை செயய் தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது. தமிழ்நாடு சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இத்தீர்மானத்தின் மீது முடிவெடுக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்தார்.
ராஜீவ் கொலை வழக்கு.. நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை.. சுப்ரீம் கோர்டில் நடந்தது என்ன? வக்கீல் பரபர
பேரறிவாளன் விடுதலை
இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் தம்மை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது 7 தமிழர் விடுதலை தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காததற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி மற்றும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.
6 தமிழர் விடுதலை
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பை முன்வைத்து ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 தமிழரும் தங்களை விடுதலை செய்ய கோரினர். இது தொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று 6 தமிழரையும் விடுதலை செய்து அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
ஆளுநருக்கு எதிராக குரல்
மேலும் தமிழக அமைச்சரவை முடிவு, சட்டசபை தீர்மானத்தின் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது பின்னடைவு என்றும் தமிழக கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
ஆளுநர் ரவிக்கு கமல்ஹாசன் குட்டு
இந்நிலையில் இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தமிழக அமைச்சரவை 2018-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டிருந்தால் அறுவர் விடுதலையில் நான்காண்டு தாமதம் தவிர்க்கப்பட்டிருக்கும். மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்சநீதின்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை. நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.