சேர்ந்தே இருப்பது..காங்கிரஸும் கோஷ்டி மோதலும்! குண்டுராவ் முன்னால் பறந்த சேர்கள்! அலறிய கேஎஸ் அழகிரி
சென்னை : சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் இரு தரப்பு நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதலால் உருட்டுக் கட்டை, சேர்களை கொண்டு தாக்கி கொண்டதில் 3 பேர் காயமடைந்த நிலையில், போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பாடு குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வருகை புரிந்தனர்.
அப்போது, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை நீக்கக்கோரி 300 -க்கும் மேற்பட்டவர்கள் கட்சி அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

கோஷ்டி மோதல்
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாததால் போராட்டக்காரர்கள் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவின் போது போராட்டக்காரர்கள் மாவட்ட தலைவர் கே பி கே ஜெயக்குமாரை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர். மூன்று மணி நேரம் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்,

கடும் தாக்குதல்
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திடிரென கைகலப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளுவாகி அடிதடியாக மாறியது. அப்போது கட்டையால் தாக்கி கொண்டதால் களக்காடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஸ்வா, நெல்லை மாவட்ட நிர்வாகிகள் டேனியல், ராபர்ட் ஆகிய மூன்று பேரும் ரத்தம் சொட்ட சொட்ட அழைத்து செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த 100 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விரைந்து வந்து பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பெரும் பரபரப்பு
மேலும், திருநெல்வேலியிலிருந்து வந்தவர்களை அவர்கள் வந்த வாகனத்திலேயே ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலுக்கு காரணம் குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக காங்கிரஸை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் சுமார் 72 மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். இதில் ஒருவர் தான் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவரான ஜெயக்குமார் .தற்போது வட்டார தலைவர்கள் நியமனத்தில் ஜெயக்குமார் குளறுபடி செய்ததாகவும் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பவர்களை வட்டார தலைவர்களாக நியமனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்னணி
இதனால் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தான் சத்தியமூர்த்தி பவன் முற்றுகையிடப்பட்டது. அப்போதுதான் இந்த மோதல் ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு சொல்லியும் கேட்காத நிலையில் கேஎஸ் அழகிரியே தொண்டர்களிடம் நேரடியாக வாக்குவாதம் செய்தார் அப்போது நிர்வாகி ஒருவரை கன்னத்தில் அறைந்து வெளியே போகும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல் என்ற நிலை கடந்த சில நாட்களாக இல்லாத நிலையில் தற்போது வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் கோஷ்டி மோதல் ஆரம்பித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications