பிக்பாஸ் பிரபலம் டூ செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி.. கவிஞர் சினேகனின் சூப்பர் பயணம்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
பாடலாசிரியர், கவிஞர் சினேகனை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இதுவரை 2500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றிவிட்டு புத்தம் புதிய பூவே என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
இவர் 2009 ஆம்ஆண்டு வெளியான யோகி என்ற படத்திலும் நடித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறிய கிராமத்தில் சிவசெல்வம் என்ற பெயரில் பிறந்தார். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் பின்னர் தனது பெயரை சினேகன் என மாற்றிக் கொண்டார்.
அத்தியாயம்
42 வயதாகும் சினேகன் பாடல்களையும் பாடியுள்ளார். 1995ஆம் ஆண்டு முதல் அத்தியாயம், இன்னும் பெண்கள் அழகா இருக்கிறார்கள் ஆகிய புத்தக வெளியீட்டு விழாவில் சினிமாவுக்கு பாடல்களை எழுதுமாறு கே பாலசந்தர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து எஸ் ஏ ராஜ்குமார் இசையில் பாடல்களை எழுத சினேகனுக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆட்டோகிராப்
2001 ஆம் ஆண்டு வெளியான பாண்டவர் பூமி படத்தில் அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், தோழா தோழா, ஆட்டோகிராப் படத்தில் ஞாபகம் வருதே, மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா ஆகிய பாடல்கள் சினேகனுக்கு புகழை வாரி கொடுத்தன. சாமி படத்தில் கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா என்ற பாடலையும் எழுதியுள்ளார். இப்படியாக பன்முகத் திறமை கொண்ட சினேகன் கடந்த 2017ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2ஆவது இடத்தை பிடித்தார்.
தமிழகத்தில் நூலகம்
பிக்பாஸில் தான் வெற்றி பெற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தமிழகத்தில் நூலகத்தை கட்டுவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. எனினும் தஞ்சாவூரில் நூலகத்தை தொடங்கும் பணிகளில் சினேகன் ஈடுபட்டார்.
கட்சி பதவி
கடந்த 2018ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் இணைந்து கட்சியின் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். நல்ல தமிழ் இலக்கியவாதியான இவர் பேசுவதில் வல்லவர். விவாதங்களில் ஆணித்தரமாக தனது கருத்துகளை முன்வைப்பார்.
கோபம்
எதற்கும் அஞ்சாமல் தனது கருத்துகளை பளீச்சென பேசுவார். யார் எந்த கேள்வி கேட்டாலும் கோபத்தை காட்டாமல் சிரித்தபடியே பதில் பேசுவார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 22,951 வாக்குகளை பெற்றார். இவர் பெற்ற வாக்கு சதவீதம் 2.1 ஆகும்.
அரசியல்வாதி அவதாரம்
இந்த நிலையில் வரும் 2021 சட்டசபைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை சினேகன் பெற்றுள்ளார். பிக்பாஸ் பிரபலமாக இருந்து குறுகிய காலத்தில் அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ள சினேகனின் பயணம் வெற்றியடைய வாழ்த்துவோம்!