தலைவர் பதவி வேண்டாம்! உறுதியாக மறுத்த ராகுல், சோனியா காந்தி.. காங்கிரஸ் தலைவராகும் ப. சிதம்பரம்?
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரும் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் நேரு குடும்பத்தை சாராத ஒருவர் அக்கட்சியின் தலைவராகும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
Recommended Video
2019 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த பின் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி ஏற்றார்.
சோனியா காந்தி மீண்டும் பதவிக்கு வந்ததில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் வலிமையான தலைமை இல்லை என்ற புகார் வைக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஜி 23 தலைவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.
இதில் கபில் சிபல் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தே அதிருப்தி காரணமாக வெளியேறினார்கள்.
இது பாஜகவின் மத பயங்கரவாதம்.. வேறென்ன ஆதாரம் தேவை? பாஜக தலைவர் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
சோனியா
சோனியா காந்தியின் தலைமையை காங்கிரசில் ஒரு பிரிவினர் எதிர்த்து வருகின்றனர். இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியில் குடும்பத்தின் தலைமை மேலும் தொடர கூடாது. அது காங்கிரசின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல. இதனால் நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியை நிர்வகிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கட்சிக்கு உள்ளே ஒலிக்க தொடங்கி உள்ளது. சோனியா காந்தி உடல்நிலை தற்போது சரியில்லை.
ராகுல்
இதனால் அவரும் தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக நீடிக்க விரும்பவில்லை. இந்த நிலையில்தான் ராகுல் காந்தியும் பல்வேறு காரணங்களுக்காக காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. சில சீனியர் நிர்வாகிகளின் செயல்பாடுகள், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல், தனக்கு எதிராக நிலவும் எதிர்ப்புகள் உள்ளிட்ட பல காரணங்களால் ராகுல் காந்தியும் தலைமை பொறுப்பிற்கு வர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
மோதல்
உத்தர பிரதேச தேர்தல்களில் சரியாக செயல்படாத காரணத்தால் பிரியங்கா காந்திக்கு சீனியர்கள் சப்போர்ட் இல்லை. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தை சாராத நிர்வாகி ஒருவர் தலைவராகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவருக்கான ரேஸில் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது..
ப. சிதம்பரம்
இன்னொரு பக்கம் ப. சிதம்பரமும் தலைவருக்கான ரேஸில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தி தலைவராக தயாராக இல்லாத பட்சத்தில் இவர்கள் இருவரில் ஒருவர் தலைவராகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சச்சின் பைலட் உள்ளிட்ட இளம் தலைவர்களும் காங்கிரஸ் தலைவருக்கான ரேஸில் தற்போது இருக்கிறார்கள். இதனால் புதிய தலைவராக வரப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாய்ப்பு உள்ளதா?
ராகுல் காந்தி தலைவராக விரும்பம் தெரிவிக்கவில்லை. அவரிடம் பேசி வருகிறோம். அவர் ஒப்புக்கொள்வாரா என்று தெரியவில்லை. அவர் தயாரில்லை என்றால் புதிய தலைவரை எப்படி தேர்வு செய்வது என்று அவர்தான் எங்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அவர்தான் இதில் எங்களுக்கு உதவ வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்க தயாராக இல்லாத நிலையில்.. விரைவில் நேரு குடும்பத்தை சேராத புதிய தலைவர் அக்கட்சிக்கு கிடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.