தென்மேற்குப் பருவமழை 93% கூடுதல்..18 மாவட்டங்களில் அடி தூள்..மூன்று ஆண்டுகளாகவே அதிகம்
சென்னை: தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இயல்பைவிட 100 சதவீதத்திற்கு அதிகமாக மழை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழ்நாடு, புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 93 சதவிதம் கூடுதலாக பெய்துள்ளது. கடந்த 122 ஆண்டுகளில் தற்போது பெய்துள்ள மழை 3வது அதிகபட்ச மழை பதிவாகும்.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கியது. பல மாவட்டங்களில் பருவமழை கொட்டித்தீர்த்துள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை தொடங்கிய ஜூன் மாதம் கோவை மாவட்டத்தில் 10 மி.மீ வரை மட்டுமே மழை பதிவானது.பின்னர், ஜூலை மாதம் 2வது வாரத்தில் பருவமழை தீவிரமடைந்தது. 225 மில்லி மீட்டர் ஆகஸ்ட் முதல்வாரத்தில் மழையின் தீவிரம் குறைந்தது. பின்னர், மீண்டும் தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
விடாத மழை பாலாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு.. ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
நிரம்பிய அணைகள்
தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சிறுவாணி அணை, கோவை குற்றாலம், சின்னாறு, பெரியாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர்சென்று கொண்டிருக்கிறது. ஆற்றில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சராசரி மழையளவான 210 மி.மீ மழை அளவை விட கூடுதலாக பெய்துள்ளது.
கோவையில் மழை அளவு
இந்த அளவு கடந்த 30 ஆண்டுகளில் 11வது முறையாக கோவையில் பதிவான தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. மொத்தம் 225 மி.மீ மழைபெய்துள்ளது. மேலும், அடுத்த 15 நாட்களுக்கும்மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காலம் முடிய இன்னும் ஒருமாதம் உள்ள நிலையில், இன்னும் கூடுதல் மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போதே சராசரி அளவை விடஅதிகளவில் மழை கிடைத்துள்ளதால், விவசாயிகள் நிலக்கடலை, மக்காச்சோளம்,சிறுதானிய பயிர்கள் மற்றும் காய்கறிகளை விதைக்க சரியான நேரம் என வேளாண்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை
இதனிடைய சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தென்மேற்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரியில் தீவிரமடைந்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. 8 இடங்களில் கனமழை, ஒரு இடத்தில் மிக கனமழை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் திருகுவளையில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை பெய்யும்.
இயல்பை விட 93% அதிக மழை
கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தென் மேற்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 செ.மீ. மழை பொழிந்துள்ளது. இந்த மழைப் பொழிவானது இயல்பைவிட 88% கூடுதலாகும். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இயல்பை விட 93% அதிகமாக மழை பெய்துள்ளது; இது கடந்த 122 ஆண்டுகளில் 3வது அதிகபட்ச மழையாகும். தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இயல்பைவிட 100%க்கு அதிகமாக மழை பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு அநேக இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் இவ்வாறு கூறினார்.