தென்மேற்குப் பருவமழை 21ல் ஆரம்பம் - 2 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை கொட்டும்
தென்மேற்குப் பருவமழை வரும் 21ஆம் தேதி அந்தமானில் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 21ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 22ஆம் தேதியன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அக்னி நட்சத்திர காலமாக இருந்தாலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கரூர், மதுரை, திண்டுக்கல்,திருச்சி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்று முதல் 23ஆம் தேதி வரை எங்கெங்கு மழை பெய்யும், வெப்பநிலை எந்த அளவிற்கு இருக்கும் என்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடி மின்னலுடன் மழை
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ,விழுப்புரம், தேனி ,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய எட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள்
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் , தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.
உள் மாவட்டங்களில் மழை
வருகின்ற 21ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
புதுவை, காரைக்கால்
வருகின்ற 22, 23ம் தேதிகளில் வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக மாவட்டங்கள் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்பநிலை உயரும்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.
மீனவர்களுக்கு அறிவிப்பு
தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமானில் ஆரம்பம்
தென்மேற்குப் பருவமழை அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 21ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 22ஆம் தேதியன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.