எங்களை சொன்னாங்க.. இப்ப வரைமுறையே இல்லாம.. ஈபிஎஸ் ஆப்சென்டான நிலையில் திமுக அரசை விமர்சித்த வேலுமணி!
சென்னை : கடந்த அதிமுக ஆட்சியில் அதிகளவு கடன் வாங்கியதாக குற்றம்சாட்டிய திமுக, தற்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் 20 மாதங்களில் வரைமுறை இல்லாமல் பல்லாயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர் என எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றோடு முடிவடையும் நிலையில், கடைசி நாளில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் பங்கேற்கவில்லை.
இன்று சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்ற அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாட்டில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் நடமாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் விமர்சித்தார்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆப்செண்ட்
2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஜனவரி மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பதிலுரை அளித்துப் பேசினார். இன்றோடு இந்த ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் நிறைவுக்கு வருகிறது. இன்று சட்டப்பேரவை நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கலந்து கொள்ளவில்லை. ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

எஸ்பி வேலுமணி
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி "சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் மக்கள் படும் இன்னல்கள் குறித்து 2 மணி நேரம் பேசினார். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளான கொரோனா காலத்தில் பணி செய்த செவிலியர்களை பணி நீக்கம் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார்.

ஆளுங்கட்சி மிரட்டல்
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி காலதாமதம், திருவாரூர் குடவாசல் கலைக்கல்லூரி இடமாற்றம் பிரச்சனை, குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என்பது குறித்தும் பல்வேறு பிரச்சனைகளை பற்றி பேசினார். ஆனால் இதனை எந்த ஊடகங்களும் ஒளிபரப்பவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களை ஆளுங்கட்சி மிரட்டி வருகிறது. இதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

திமுக அரசு கடன்
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என குரல் கொடுத்து விட்டு தற்போது ஆளுங்கட்சியான பின் 13 ஆயிரம் ரூபாய் ஏக்கருக்கு கொடுக்கிறார்கள். அதை 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகளவு கடன் வாங்கியதாக குற்றம்சாட்டிய திமுக, தற்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் 20 மாதங்களில் வரைமுறை இல்லாமல் பல்லாயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர்" எனக் குற்றம் சாட்டினார். மேலும் தமிழ்நாட்டில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் நடமாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் விமர்சித்தார் எஸ்பி வேலுமணி.












Click it and Unblock the Notifications