ஆயத்த நிலையில் தமிழகம்.. கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேக ஆம்புலன்ஸ்கள்.. முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக பிரத்யேக சிறப்பு ஆம்புலன்ஸை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,731- ல் இருந்து 4,862 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் 4,824 பேர், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்த 38 பேர் என 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மட்டுமே இரண்டாயிரம் பேருக்குமேல் நேற்று மட்டும் உறுதிசெய்யப்பட்டது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணாநகரில் 293 பேருக்கு தொற்று பரவி இருக்கிறது. இதேபோல கோடம்பாக்கம் மண்டலத்தில் 287 பேர், அடையாரில் 258 பேர், ராயபுரத்தில் 225 பேர் பாதிக்கப்பட்டனர்.

சென்னை நிலவரம்
சென்னையில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் தொற்று மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகமுள்ள இந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதே போல தண்டையார்பேட்டையில் 189 பேர், திரு.வி.க.நகர் 159 பேர், வளசரவாக்கம் 153 பேர், அம்பத்தூர் 150 பேர் என பட்டியல் அதிகரிக்கிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலபடுத்தப்படுகிறது. மேலும் பல கட்டுப்பாடுகளையும் அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

ஆம்புலன்ஸ் வசதிகள்
கொரோனா இரண்டாவது அலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் பலர் இறந்துபோக நேர்ந்தது. இந்த முறை அதுபோல் நடக்காமல் இருக்க, அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன. அதுபோல் ஆம்புலன்ஸ் வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 42 பிரத்யேக சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை கொண்டுவரப்பட்டுள்ளது.

ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். '1913' என்ற எண்ணை தொடர்புகொண்டு இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கட்டுப்பாடுகள்
தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் வழிபாட்டு தலங்களை மூட வேண்டும். கடைகள் திறப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் போன்ற பரிந்துரைகளை சுகாதாரத்துறை சார்பில் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நாளை அல்லது நாளை மறுதினத்தில் இருந்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications