பொங்கல் சிறப்புப் பேருந்துகள்... ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக அரசுப் பேருந்துகளில் செல்வதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க இப்போதே பேருந்துகளில் அரசு போக்குவரத்தின் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் சுமார் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிகிறது.

பொங்கல் திருநாள்
தமிழரின் திருநாளான பொங்கல் பண்டிகை, 2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல் 4 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் நடைபெறுவதால் வெளியூரில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். ரயில்களில் முன்பதிவு தொடங்கும் சிறிது நேரத்திலேயே அனைத்து இடங்களும் நிரம்பிவிடும். அது மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து இடங்களுக்கும் அரசுப் பேருந்துகள் செல்வதால் பெரும்பாலான மக்கள் பேருந்துகளில் செல்வதையே விரும்புவர். இதனால் கடைசி நேரத்தில் பேருந்து கிடைக்காமல் அவதிப்படாமல் இருக்க முன்கூட்டியே முன்பதிவு வசதியை செய்துவிடுகிறது.

இணையதளத்தில் முன்பதிவு
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் வெளியூர் செல்லும் பயணிகளுக்காக இன்று முதல் முன்பதிவு தொடங்கி உள்ளது. www.tnstc.in என்ற இணையதளம் மூலமாக பஸ் டிக்கெட் முன்பதிவுகள் செய்து கொள்ளலாம். பெங்களூரு, திருப்பதி மற்றும் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களை 044 49076316 என்ற எண்ணில் தொடர்புகொண்டு கேட்கலாம் என்றும் தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2021 ஜனவரியில் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்ப ஏதுவாக 15,270 பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆன்லை மட்டுமின்றி சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவிற்கு 13 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. கோயம்பேட்டில் 10 மையங்களும் தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையங்களும் பூவிருந்தவல்லியில் ஒரு முன்பதிவு மையமும் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. எனவே இந்த ஆண்டும் அதே அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கிருந்து பேருந்துகள் புறப்படும்
சென்னையை பொறுத்தவரை மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்குப் பிறகு, பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வருபவர்களுக்காக வழக்கமான பேருந்துகளுடன் 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications