தவெக புஸ்ஸி ஆனந்த் ஈரோட்டில் தலைமறைவாக இருக்கிறாரா? தீவிர தேடுதல் வேட்டையில் தனிப்படை போலீசார்
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவரும் தலைமறைவான நிலையில் அவர்களின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படைகள் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு அதிகமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரமாக காத்திருந்ததாலும், கடும் நெரிசல் காரணமாகவும் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம், த.வெ.க.வைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் என 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே புஸ்ஸி ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
"எங்கள் தொண்டர்களைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றே தாமதமாக வந்தது" என்று முதல் தகவல் அறிக்கையில் வறான தகவல் உள்ளது. வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரியபோதே காவல்துறை மறுத்திருக்கலாம். கூட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால்தான் நெரிசல் ஏற்பட்டது. கரூரில் நடந்தது திட்டமிட்ட செயல் அல்ல, அது ஒரு விபத்துதான்." என புஸ்ஸி ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக புஸ்ஸி ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரை பிடிப்பதற்காக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளதால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய 5 தனிப்படைகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் ஆனந்த் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக கூறபபடுகிறது.
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தின் செல்போன் பயன்பாடு, உறவினர்கள் மற்றும் நெருக்கமான மாவட்ட செயலாளர்கள் தொடர்புடைய பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் ஆனந்த் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றங்கள் விடுமுறையில் இருக்கும். எனவே புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தற்போது கைது செய்யப்பட்டால் அவர்களால் திங்கட்கிழமை தான் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி முறையீடு செய்ய முடியும். எனவே இந்த நேரத்திலேயே இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications