"விநாயகரும்.. உதயநிதியும்".. மழைவிட்டாலும் தூவானம் விடாது போலயே.. எல்லாத்துக்கும் காரணம் "அவர்"தானா?
உதயநிதி ஸ்டாலின் பதிவிட்ட விநாயகர் ட்வீட் குறித்து சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன
சென்னை: வினையை தீர்க்காமல், புதுசா ஆரம்பித்து வைத்து விட்டார் அந்த விநாயகர்.. உதயநிதி பிள்ளையாருடன் ஒரு ட்வீட்டை போட, அதன் தாக்கம் இத்தனை நாளாகியும் தணியவில்லை... "மதவாத அரசியலைதான் திமுகவும் கையில் எடுக்கிறதா" என்ற கேள்வியை முன்வைத்து விவாதங்கள் அனல்பறக்க நடந்து வருகின்றன!
பொதுவாக, திமுகவை பொறுத்தவரை 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்', மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற முழக்கங்களை முன்வைத்துதான் அதன் ஆரம்ப கால அரசியல் நகர்ந்தது.
ஆனால், கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற சிறுபான்மையின மக்களின் விழாக்களுக்கு மட்டும் திமுக எப்போதுமே வாழ்த்து சொல்லி வரும்.. அதே சமயம் இந்துக்கள் கொண்டாடும் எந்த ஒரு பண்டிகைக்கும் வாழ்த்து சொல்வதில்லை என்ற நிலைப்பாட்டையும் அது வழக்கமாகவே கடைப்பிடித்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி
இந்நிலையில், 3 நாளைக்கு முன்னாடி உதயநிதி ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதாவது விநாயகர் சதுர்த்தி முடிந்தபிறகு, நடுராத்திரி இந்த ட்வீட்டை போட்டிருந்தார்.. அந்த ட்வீட் நேரம் மணி 1.54 என்று இருந்தது.. ஒரே ஒரு விநாயகர் சிலையை தன் நெஞ்சோடு அணைத்தபடி அந்த போட்டோ இருந்தது.. அந்த சிலை களி மண்ணால் செய்யப்பட்டது. இதற்கு எந்த கேப்ஷனும் அதில் இல்லை.

வாழ்த்து
இந்த போட்டோவை போட்டுவிட்டு உதயநிதி என்ன சொல்ல வருகிறார் என்று தெரியாமல் இருந்தது.. கிட்டத்தட்ட பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்தாகவே ட்விட்டர்வாசிகள் இதை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.. பிறகு "எனக்கு, என் மனைவிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. ட்விட்டரில் போட்டது தன் அம்மாவின் விநாயகர் சிலை" என்று உதயநிதியே அதற்குரிய நீண்ட விளக்கத்தை தந்து அறிக்கையும் வெளியிட்டார்.

மதவாத அரசியல்
ஆனாலும் இந்த விஷயத்தை யாரும் அவ்வளவு லேசில் விடவில்லை.. தொடர்ந்து விவாதத்தை கிளப்பியபடியே உள்ளது அந்த ட்வீட்... "மதவாத அரசியலைத்தான் திமுகவும் கையிலெடுக்கிறதா" என்ற கேள்வியையும் முன்னிறுத்தி வருகிறது. இதற்கு சில காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன!

சர்ச்சை பதிவு
கடந்த 2014ல், திமுகவின் பொருளாளராக இருந்த ஸ்டாலின், திடீரென விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லி, தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலேயே அந்த பதிவை போட்டிருந்தார்.. "Greetings to all on the occasion of Vinayaka Chaturthi!" என்ற அந்த மிகபெரிய அதிர்வலையை அந்த சமயம் ஏற்படுத்தியது.

கருணாநிதி
கோபாலபுரமே அதிர்ந்தது.. கலைஞர் கருணாநிதியும் இதனால் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டும் விட்டது. "இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று ஒரு மறுப்பும் உடனடியாக வெளியானது. இந்த சம்பவத்தைதான் பலர் உதாரணமாக எடுத்து சொல்லி இப்போது நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

துர்கா
அதேபோல, துர்கா ஸ்டாலின் எப்போதெல்லாம் கோயிலுக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் அது சம்பந்தமான போட்டோக்கள் இணையத்தில் உலா வரும். "இதுவா திமுகவினரின் பகுத்தறிவு கொள்கை" போன்ற விமர்சனங்களும் கூடவே எழும்.. அப்போது, ஸ்டாலின் "எனது மனைவி கோவிலுக்கு செல்வதை நான் ஒருபோதும் தடுத்ததில்லை. நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்பது போன்ற தோற்றத்தை உண்டுபடுத்தி தவறான பரப்புரையை மேற்கொள்கின்றனர்..திமுக தொண்டர்களில் 90 சதவிகிதம் பேர் இந்துக்களே, திமுக இந்துக்களுக்கு விரோதி இல்லை" என்று பலமுறை விளக்கம் அளித்துள்ளார். இந்த காரணங்களைதான் இப்போது ஒருசாரார் மேற்கோள் காட்டி பேசி வருகின்றனர்.

போட்டோக்கள்
அதுமட்டுமில்லை, கடந்த காலங்களில் உதயநிதியே கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்ட போட்டோக்களையும் பதிவிட்டு, "கடவுள் நம்பிக்கை இல்லாதவர் ஏன் பழனிக்கு சென்றார்.. பஞ்சாமிர்தம் வாங்கவா?" என்றும் ஒருசிலர் நக்கலாக கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

பிரசாந்த் கிஷோர்
"பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு வேலை செய்ய ஆரம்பித்ததில் இருந்தே நிறைய மாற்றம் தெரிகிறது.. இந்து மதத்துக்கு ஆதரவான கட்சி போல காட்டி கொள்வதில் முனைப்பு காட்டப்படுகிறது.. அனைத்து தரப்பு இந்துக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காகவே இவ்வாறு வியூகங்கள் கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.. இந்த பக்தியெல்லாம் ஓட்டுக்காக தான்" என்கிறது இன்னொரு தரப்பு.
Recommended Video

எச்.ராஜா
ஒருமுறை எச்.ராஜா பேசும்போது, "பிராமணர் எதிர்ப்பு கொள்கை கொண்ட திமுக, இப்போது பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம்தான் சரண் அடைந்திருக்கு... இவங்க கதையை அவரே முடிச்சி வெச்சிடுவார்" என்று தெரிவித்திருந்த நிலையில், அதையும் சிலர் தற்போது நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

வழிபாடுகள்
அதுமட்டுமல்ல, " உதயநிதி ஒரு போட்டோவை போட்டுவிட்டாலும்கூட, வாழ்த்து சொல்றதும், சொல்லாததும், சிலை வைத்து வணங்குறதும் வணங்காதது அவரது தனிப்பட்ட விஷயம்.. ஒவ்வொருவருக்கும் வழிபாட்டு உரிமை உள்ளது.. ஆனால், பகுத்தறிவு பேசிக் கொண்டு இப்படி நடந்து கொள்வதுதான் ஏற்க முடியவில்லை என்கிறார்கள் நடுநிலைவாதிகள்.

மத சாயம்
"யதார்த்தமாக உதயநிதி போட்ட ஒரு போட்டோவை வைத்து கொண்டு, ஒட்டுமொத்த கட்சிக்கும் மதவாத சாயம் பூசுவது சரியா? இவ்வளவு வருடம் திராவிட கொள்கையில் ஊறி வந்தநிலையில், தேவையில்லாமல் எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்குகின்றன.. உதயநிதி நீண்ட, உரிய விளக்கத்தை தந்தும் இப்படி பேசி கொண்டிருப்பது சரியில்லை" என்று உடன்பிறப்புகள் கொந்தளிக்கவும் செய்கின்றனர்.

விமர்சனங்கள்
இப்படி கருத்தியல் ரீதியாக விவாதங்களும் விமர்சனங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்து வந்தாலும், மதத்தை முன்னிறுத்தி நகர்வது சற்று வேதனையாக உள்ளது.. ஒட்டுமொத்த அரசியலும் மதவாதத்தை நோக்கியே சென்றுகொண்டிருப்பதும் நம் வேதனையை அதிகப்படுத்தும்படியாகவே இருக்கிறது... ஆனால், பகுத்தறிவு என்பது தானாக தனக்குள் ஏற்படுவது, அது யார் சொல்லியும், கட்டாயப்படுத்தியும் ஒருபோதும் வருவது கிடையாது என்பதுதான் வாழ்வின் யதார்த்தம்!!












Click it and Unblock the Notifications