ஆவடி அருகே நகைக் கடை ஓனரை கட்டி போட்டு துப்பாக்கி முனையில் ரூ 1. கோடி கொள்ளை.. 2 பேர் கைது
சென்னை: சென்னை ஆவடி அருகே துப்பாக்கி முனையில் ரூ 1.15 கோடி நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ராஜஸ்தானை சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆவடியை அடுத்த முத்தாப்புதுப்பேட்டை எல்லையம்மன் நகர் ஐஏஎஃப் சாலையைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணா ஜுவல்லர்ஸ் என்ற நகைக் கடையையும் அடகு கடையையும் நடத்தி வருகிறார்.

கடந்த 15 ஆம் தேதி பிரகாஷ் மட்டும் தனியாக இருந்தார். அப்போது காரில் வந்த 4 மர்மநபர்கள் திடீரென கடைக்குள் புகுந்தனர். அப்போது பிரகாஷின் கை, கால்களை கட்டிப் போட்டு துப்பாக்கி முனையில் மிரட்டி நகைக் கடையில் இருந்து ரூ 1.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி, ரூ 5 லட்சம் பணம் மற்றும் ஐபோன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக முத்தாபுதுப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் துப்பாக்கியை காட்டி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரின் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து தேடி வந்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக தினேஷ்குமார், சேத்தன்ராம் ஆகியோரை சென்னையில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் சவுகார்பேட்டையில் தங்கியிருந்தனர், கொள்ளையர்கள் தங்குவதற்கு இவர்கள் அடைக்கலம் கொடுத்ததாக தெரிகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications