ஈழத்தில் 75 லட்சம் பனைமரங்கள் இல்லை? சீமானுக்கு ‘ஒற்றைப் பனைமரம்’ இயக்குநர் பதிலடி
சென்னை: இலங்கையில் நடந்த போருக்கு முன்னதாக வடக்கு மாகாணத்தில் மட்டும் 75 லட்சம் பனைமரங்கள் இருந்தன என்று 'ஒற்றைப் பனைமரம்' திரைப்படத்தின் இயக்குநர் ஒரு தகவலை தெரிவித்திருக்கிறார்.
அரசாங்கம் போடும் தடைகளை எல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கும் நாம் தமிழர் சீமான், தமிழ்நாட்டில் 'ஒற்றைப் பனைமரம்' படத்தை திரையிடக்கூடாது என்ற ஒரு வாதத்தை முன்வைத்திருக்கிறார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அது வன்மையான கண்டனத்துக்குரியது. ஆகவே இப்படத்தை வெளியிடக்கூடாது. மீறித் திரையிட்டு, முற்றுகையிட்டுப் போராட வேண்டிய நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறோம்" எனக் கூறியிருந்தார்.

இந்தப் படம் கடந்த 2 ஆண்டுகள் முன்பாகவே தயாரிக்கப்பட்டுவிட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும் இருக்கிறது. அதன் பின்னர் இப்போது தமிழ்நாட்டில் இது வெளியாகும் என அறிவித்திருந்தது படக்குழு. ஊடகத்தினர் பார்ப்பதற்காக இந்தப் படம் பிரத்தியேகமாகத் திரையிட்ட போது அங்கே சில சலசலப்புகள் ஏற்பட்டன. அது தொடர்பாக வீடியோ வெளியாகி கவனம் பெற்றிருந்தது.
இந்நிலையில்தான் இதன் இயக்குநர் புதியவன் ராசைய்யா அளித்துள்ள ஒரு பேட்டியில் சில விசயங்களைப் பேசி இருக்கிறார். அது என்ன ஒற்றைப் பனைமரம்? அதற்கு அவர், "ஈழத்தில் உள்ள வடக்குப் பகுதியில் மட்டும் போருக்கு முன்னதாக 75 லட்சம் பனைமரங்கள் இருந்தன. ஆனால், அவை இன்று இல்லை. பனைமரம் என்பது ஈழத்தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதற்காக இப்படி தலைப்பு வைத்தோம்" என்றவர் தொடர்ந்து பேசினார்.
"நாங்கள் கடந்த பத்து ஆண்டுகள் என்ன இலங்கையில் நடந்ததோ அந்த வரலாற்றைப் படமாக்கி இருக்கிறோம். அப்போது நடந்ததை ஏன் இப்போது எடுக்கவேண்டும் என சிலர் கேட்கிறார். Schindler's List என்று ஒரு திரைப்படம். இது இரண்டாம் உலகப்போர் பற்றி எடுக்கப்பட்டது. இது எப்போது வெளிவந்தது? உலகப் போர் நடந்து 40 ஆண்டுகள் கழித்து வெளிவந்தது? இத்தனை வருடங்கள் கழித்து இப்போது ஏன் இருக்கிறீர்கள் என்று அப்போது இவர்கள் போய் கேட்டார்களா? அப்படிக் கேட்க முடியுமா?

வரலாறு என்பது எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் அது பதியப் படவேண்டும்? யூதர்களை விஷ வாய்ப்பு கூடாரத்தில் அடைக்கப்பட்டார்கள் என்பதை தெரியாமல், அவர்கள் எப்படி முன்னேற முடியும்? இலங்கையில் என் கண்முன்னால் பார்த்ததை நான் எப்படி படமாகச் சொல்லாமல் இருக்க முடியும்? அது என் வருங்கால சமூகத்திற்குச் செய்யும் அநீதி இல்லையா? " என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் பற்றி தமிழ்நாட்டில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு உள்ளது என்றும் அதை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் பெற்றுவருகின்றனர் என்றும் அதற்காக உண்மையை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது என்றும் சொல்கிறார் இந்த இயக்குநர்.
இதுவரை இப்படம் 17 விருதுகளைப் பெற்றுள்ளது. அங்கு எல்லாம் திரையிட்ட பின்பே தமிழ்நாட்டில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதில் நடித்த நாயகி நவயுகாவுக்கு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பும் இருந்துள்ளது. தனிப்பட்ட முறையில் தன்னை பலர் விமர்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்றும் இது இலங்கையில் வாழ்ந்து கொண்டுள்ள மக்களின் உண்மைக் கதை என்றும் கூறியிருக்கிறார்.

"யுத்தம் நடந்த ஒரு நாட்டில் நாங்கள் வாழ்ந்து இருக்கிறோம். எதிர்பாராத விதமாக எங்கள் போராட்டம் தோல்வியைத் தழுவி இருக்கிறது. ஆகவே எங்களுக்கு ஒரு சுயவிமர்சனம் தேவை. அதைச் செய்யாத சமூகம் முன்னேறாது. அதைப் படத்தில் பேசி இருக்கிறேன். அதற்காக எதிர்ப்புகள் வந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என்கிறார் இயக்குநர் ராசைய்யா. இந்த ஒற்றைப் பனைமரம் இலங்கையில் நடந்த போருக்குப் பின்பாக நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications