வீட்டு மனைகள் வாங்குவோர் -விற்போர் கவனத்திற்கு! இனி அலைய வேண்டியதில்லை! வந்தாச்சு அரசின் புதிய செயலி
சென்னை: அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல், அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் பணிகளை மேற்கொள்ள புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் செயலியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
வீட்டுமனைகள் வாங்குவோர், விற்போருக்கு இந்த புதிய மென்பொருள் செயலி பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

தமிழ் நிலம்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்ககத்தின் தமிழ் நிலம் வலைதளத்தில் (https://tamilnilam.tn.gov.in) நிறுவப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் மற்றும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள் ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொடங்கி வைத்தார்.

மனைகள் கிரையம்
அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைப் பிரிவில் பொதுமக்கள் மனைகள் கிரையம் பெறும்போது ஒவ்வொரு மனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய, தனித்தனியாக மனுக்கள் பெறப்படும் சூழல் இருந்து வருகிறது. இவ்வாறு ஒரே மனைபிரிவில் (layout) உள்ள வீட்டு மனைகளை நிலஅளவை செய்து உட்பிரிவு செய்வதற்காக நில அளவர் பல்வேறு தினங்களில் தனித்தனியே செல்லவேண்டிய சூழலும் இருக்கிறது.

1.50 லட்சம் உட்பிரிவு மனுக்கள்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் 1.50 லட்சம் உட்பிரிவு மனுக்கள் பெறப்படுகிறது. அதில் பெரும்பாலான மனுக்கள் மனைப்பிரிவைச் சார்ந்தவை. இதனால், உட்பிரிவு பட்டா மாறுதல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இப்புதிய மென்பொருள் மூலமாக மனைப்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து மனைப்பிரிவின் உரிமையாளர்களின் பெயரில் பதிவு செய்யப்படுவதால், பின்னாளில் மனைகளை உட்பிரிவு செய்யக்கோரி தனித்தனியாக மனுக்கள் வரப்பெறுவது தவிர்க்கப்பட்டு, மனைப்பிரிவுகள் சார்ந்த உட்பிரிவு மனுக்களின் எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கும் சூழல் ஏற்படும்.

நேரில் செல்ல வேண்டாம்
இப்புதிய மென்பொருள் மூலமாக, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் உள்ள அனைத்து மனைகளும் உட்பிரிவு செய்யப்பட்டு, மனைப்பிரிவின் உரிமையாளர் பெயரிலேயே பட்டா வழங்கப்படும். மேலும், தனித்தனியே பொதுமக்கள் அம்மனைப்பிரிவில் ஒரு மனையை வாங்கும்போது பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே தானியங்கி பட்டா மாறுதல் முறையில் கிரையம் பெற்ற பொதுமக்களின் பெயரில் மாற்றம் செய்யப்படும். பட்டா மாற்றத்திற்காக பொதுமக்கள் மீண்டும் தனியே விண்ணப்பிக்கவோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமின்று அவர்களது இன்னல்கள் தவிர்க்கப்படும்.

அரசு நிலம்
மனைப்பிரிவில் உள்ள பொதுப்பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களான சாலைகள், பூங்கா போன்ற நிலங்கள் தனியே உட்பிரிவு செய்யப்பட்டு அந்த இடம் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பெயரில் உடனுக்குடன் நில ஆவணங்களில் பதிவு செய்யப்படும். இதனால், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து தடுக்க இயலும். மேலும், இதுபோன்ற பொதுப்பயன்பாட்டிற்கான நிலங்களை மோசடியாக விற்பனை செய்யும் நிகழ்வுகளும் தவிர்க்கப்படும்.












Click it and Unblock the Notifications