மாணவரணி முதல் மாநகராட்சி தேர்தல் வெற்றி வரை...ஸ்டாலினின் 54 ஆண்டுகால அரசியல்...சுவாரஸ்ய நிகழ்வுகள்
ஸ்டாலின் பிறந்த நாள் இன்று, திமுக தலைவராக, கூட்டணிக்கட்சிகளை இணைத்துக் கொண்டு ஜனநாயக போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று மக்கள் இயக்கமாக மாற்றி மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் கூட்டணிக்கட்சிகளை அரவணைத்து தொடர்வெற்றி பெற்று வருகிறார். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மு.க.ஸ்டாலினுக்கு இந்த ஆண்டு மிகச் சிறந்த முக்கியமான ஆண்டு. அவரைப்பற்றி சில வரிகள்.

ஸ்டாலின் இன்று ஏன் தேவைப்படுகிறார்
திமுக தலைவர் ஸ்டாலினின் 69 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் ஸ்டாலின் போன்ற தலைவர் ஏன் தேவைப்படுகிறார் என்பதை திமுக தொண்டர்களை கேட்டால் அடுக்கடுக்காக பல விஷயங்களை சொல்வார்கள். ஒரு பத்திரிக்கையாளர் பார்வையில் அவரது பணி, அவரது தேவை, தமிழக அரசியலில் அவர் எடுத்துள்ள நிலைப்பாடு உள்ளிட்டவற்றை அணுகுகிறது இந்தக்கட்டுரை.

மகன் ஸ்டாலின் குறித்து கருணாநிதி
இதை தொடங்கும்முன் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியதை குறிப்பிடுவோம், "ஒரு தந்தை என்ற முறையில் ஸ்டாலின் முன்னேற்றத்துக்கு நான் எந்தக் கடமையும் ஆற்றவில்லை. ஆனால், ஒரு மகன் என்ற முறையில் தனது கடமைகளைச் சரிவர ஆற்றி என்னைப் பெருமைப்பட வைத்திருக்கின்றான். இப்படி ஒரு மகன் கிடைத்ததற்காகப் பெருமைப்படுகிறேன்." என்று கூறியிருந்தார். அவர் மறைந்தப்பின்னரும் தந்தையின் புகழைத்தாண்டி இந்திய அளவில் சிறந்த முதல்வர் என ஸ்டாலின் பெயரெடுத்துள்ளார்.

வேகத்தை குறைத்து நிதானப்பட்ட ஸ்டாலின்
ஆரம்பத்தில் ஸ்டாலின் பேச்சு, செயல், நடவடிக்கை, கூட்டணிக்கட்சிகளை அணுகும் விதத்தில் ஒருவித வேகம் இருக்கும். இது பலமுறை திமுகவுக்கு பிரச்சினையை கொண்டுவரலாம் என தலைவர் கருணாநிதி முட்டுக்கட்டை போட்டுள்ளதை திமுக நிர்வாகிகள், மூத்த பத்திரிக்கையாளர்கள் பதிவு செய்வதை பார்த்துள்ளோம். ஆனால் தந்தையின் மறைவுக்குப்பின் தனது தோளில் சுமந்த திமுகவை காக்க அவர் தனது அடியை நிதானமாக எடுத்து வைத்தார் எனலாம். ஒரு பெரிய தலைவரின் மறைவுக்குப்பின் கட்சிக்குள் சலசலப்புகள், துரோகங்கள், கோஷ்டி பூசல்கள் எழ வாய்ப்புண்டு ஆனால் அவைகள் எழாமல் பார்த்துக்கொண்டது அவரது தலைமைக்கு அத்தாட்சியாக அமைந்தது.

முன்னரே தேடி வரவேண்டிய அங்கிகாரம்
ஸ்டாலினை 2016-க்கு முன்னரே முதல்வர் வேட்பாளராக அறிவித்து கொண்டு வந்திருக்கவேண்டும் என்ற ஆதங்கம் இன்றும் பலருக்கும் திமுகவில் உண்டு. ஆனால் ஸ்டாலின் சரியான நேரத்தில் வரவில்லை என்றாலும் சரியான நேரத்தில் தலைவராக இருக்கிறார் என்பது மட்டும் தற்போதைய யதார்த்தம். இன்றுள்ள சூழ்நிலையில் வழக்கமான திமுக அதிமுக அரசியலாக இல்லாமல் ஒரு கொள்கை அரசியலை எதிர்கொள்ளும் நிலையில் தமிழகம் உள்ளது. இடதுசாரி சித்தாந்தம், பொதுவான சித்தாந்தம் என்பதைத்தாண்டி வலதுசாரி சித்தாந்தம் தலையெடுக்கும் நேரத்தில் ஸ்டாலின் தமிழகத்தின் முதன்மைக்கட்சிக்கும், தமிழகத்துக்கும் தலைமை தாங்கும் நிலையில் உள்ளார்.

1968 ஆம் ஆண்டு மாணவர் இயக்கத்தில் தொடங்கிய வாழ்க்கை
திமுகவில் ஸ்டாலின் 1968 ஆம் ஆண்டு மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டாலும், 1980 களில் முன்னிலைப்படுத்தப்பட்டார். கட்சியிலும் சாதாரண கோபாலபுரம் மாணவர் திமுகவை உருவாக்கி, திமுகவின் கொள்கைகளை விளக்கும் நாடகம் போட்டது, திமுகவில் கட்சி அமைப்புகளில் சிறிய சிறிய பொறுப்புகளில் பதவி வகித்தது, தமிழகத்தில் இடதுசாரி இயக்கங்களுக்கு அடுத்து இளைஞர் அமைப்பை முதன்முதலாக 1980-ல் தொடங்கி அதன் தலைமை ஏற்று வளர்த்தது, அன்பகம் என்கிற திமுக தலைமை இடத்தை இளைஞரணிக்கு பெற்றுத்தந்தது என வளர்ந்தவர் திமுகவின் பொருளாளர் என்கிற மிகப்பெரிய பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார். தொடர்ந்து செயல் தலைவர், பின் தலைவரானார்.

1968 ஆம் ஆண்டுமுதல் திமுகவில் இருந்தாலும் தாமதமாக கிடைத்த அங்கிகாரம்
என்னதான் 1968 ஆம் ஆண்டு கட்சிக்குள் இணைந்தாலும், 1976 ஆம் ஆண்டு மிசாவில் கைதானாலும் அவருக்கான அங்கிகாரத்தை அளிப்பதில் தந்தை கருணாநிதி வெகுநிதானம் காட்டினார் என்பதே உண்மை. ஸ்டாலினுக்கு தமிழக சட்டப்பேரவையில் போட்டியிட 1984-ஆம் ஆண்டுதான் முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரம், இந்திரா சுடப்பட்டு கொல்லப்பட்ட நேரம், ஆயிரம் விளக்கில் செல்வாக்கு மிக்க அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமிக்கு எதிராக போட்டி. வெல்ல வேண்டிய நிலையில் எம்ஜிஆர் உடல் நிலை, இந்திரா மறைவு அதிமுகவுக்கு பெருவாரியான வெற்றியை தர ஸ்டாலினும் தோல்வியை தழுவினார்.

வெளிப்பட்ட நிர்வாகத்திறன்
1989-ல் எம்ஜிஆர் மறைவுக்குப்பின் நடந்த தேர்தலில் அதே ஆயிரம் விளக்கில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்து ஆட்சி கலைக்கப்பட ராஜீவ் மரணம் காரணமாக திமுக வெற்றி பெற முடியாத நிலையில் தோல்வியை தழுவினார். 1996-ம் ஆண்டு சென்னையின் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட மேயராக பொறுப்பேற்றார். அப்போதுதான் ஸ்டாலினின் நிர்வாகத்திறன் வெளிப்பட்டது. சென்னையில் மேம்பாலங்கள் கட்டியது, சென்னையின் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டது போன்றவற்றை சொல்லலாம்.

மேயராக, உள்ளாட்சி அமைச்சராக பணியாற்றி பாராட்டு
அதன்பின்னர் 2001-ம் ஆண்டு சென்னை மேயராக மீண்டும் தேர்வுப்பெற்றார். ஸ்டாலினின் வெற்றியை தடுக்க என்ன முயற்சி செய்தும் தடுக்க முடியவில்லை. அதன்பின்னர் இரட்டை உறுப்பினர் பதவி சட்டம் கொண்டு வரப்பட்டதால் மேயர் பதவியை துறந்தார். அதன்பின்னர் 2006-ம் ஆண்டு தேர்தல் ஸ்டாலினின் நிர்வாகத்தை தமிழகம் முழுதும் பார்த்தது. உள்ளாட்சித்துறை அமைச்சராக ஸ்டாலின் ஆற்றிய பணிகள் 5 ஆண்டுகள் அவர் சிறந்த நிர்வாகி என்பதை குறையின்றி அனைவரையும் கூறவைத்தது.

52 ஆண்டுகளுக்குப்பின் தனிப்பெரும் தலைவராக எதிர்க்கட்சிதலைவர் பதவி
2011-ம் ஆண்டு கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரானார் ஸ்டாலின், 2016-ம் ஆண்டு ஸ்டாலினின் நமக்கு நாமே பிரச்சாரப்பயணம் ஜெயலலிதாவை அசைத்துப்பார்த்தது. அதன் விளைவு 89 இடங்களை கூட்டணியோடு சேர்த்து 98 இடங்களை திமுக பெற்றது. ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவராக 2016-21 வரை இருந்தார். இந்த இடத்திற்கு வர ஸ்டாலின் எடுத்துக்கொண்ட ஆண்டுகள் 52. ஆனால் சில ஆண்டுகளில் கட்சியில் மேலே வந்தவர்கள் ஸ்டாலின் வாரிசு அரசியல் மூலம் வளர்ந்தார் என்ற குற்றச்சாட்டை வைத்ததுதான் வேடிக்கை.

வாரிசுப் பிரச்சினை அனைத்துக்கும் பிரச்சினை
இதேப்பிரச்சினைதான் ஸ்டாலின் வளர்ச்சியை தடுத்தது. இதைத்தான் ஒரு தந்தையாக ஸ்டாலினுக்கு நான் பெரிதாக எதையும் செய்யவில்லை என சொல்ல வைத்தது. தமிழக அரசியலில் பல சோதனைக்களங்களை கண்டு கட்சியை வளர்த்துச் சென்றவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரது ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் ஸ்டாலின் வளர்ந்தாலும் அவரது மகன் என்கிற பார்வையே மற்றவர் அவரை கணிக்க வைத்தது. அதன்படியே அவர்மீது விமர்சனமும் வைக்கப்பட்டது.

தந்தையுடன் ஒப்பீடு
அவரது பேச்சாற்றல், எழுத்துப்பணி போன்றவற்றையும் தந்தை கருணாநிதியுடன் ஒப்பிடும்போக்கு இன்றும் சிலரால் செய்யப்படுகிறது. பேச்சாற்றல், எழுத்துப்பணி போன்றவற்றில் தந்தையுடன் ஒப்பிட்டு அவரை விமர்சிப்பது ஸ்டாலினின் தவறல்ல. யாரும் எட்டிப்பிடிக்க முடியாத ஆற்றலுக்கு சொந்தக்காரரான கருணாநிதியின் திறமையை எல்லோரும் எப்படி கைகொள்ள முடியும் என்பது கற்றறிந்தோருக்கு விளங்கும்.

நிர்வாகத்திறன் சான்று
ஸ்டாலின் திறமைமிக்க தலைவர் என்பதைத்தாண்டி கருணாநிதியுடன் ஒப்பிட்டு அவரை சிறுமைப்படுத்தும் சிலர் மேயராக, துணை முதல்வராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக ஸ்டாலினின் திறமை மிக்க நிர்வாகத்திறன் குறித்து எதுவும் சொல்ல முடியாத அளவுக்கு அவரது பணி இருந்தது. அவர் எது சரியோ அதைச் செய்யுங்கள் என அதிகாரிகளுக்கு கொடுக்கும் சுதந்திரம் அவரை சிறந்த நிர்வாகியாக்கியது.

கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் ஆற்றல் மிக்க தலைவர்
பல தலைவர்கள் இருந்தாலும் கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் ஸ்டாலின் ஆற்றல் மிக்க தலைவராக வளர்ந்து விட்டார் என்பதை மறுக்க முடியாது. திமுக தலைவர் கருணாநிதி ஓய்வை நோக்கி சென்ற நிலையில் 2016-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு நிகரான தலைவராக தமிழகத்தில் எதிரணியில் நின்றார். சிறிய மாற்றம் நிகழ்ந்திருந்தாலும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும். ஆனால் தேமுதிகவை அணுகிய விதத்தில் நடந்த சில குளறுபடி காரணமாக வாய்ப்புத் தவறிப்போனது.

தனிப்பெரும் கட்சியாக வென்றாலும் விமர்சனம் ஸ்டாலின்மீது
2016-ம் ஆண்டு 89 இடங்களில் தனித்து திமுக பெற்ற வெற்றி 2011 ஆம் ஆண்டு 23 இடங்களை மட்டுமே பெற்று அடைந்த தோல்வியைவிட பெருவெற்றிதான் ஆனாலும் அதன் தோல்வியை வைத்து வரும் விமர்சன அம்புகளும் ஸ்டாலினை நோக்கியே பாய்ந்தது. ஆனால் 2016-ம் ஆண்டுக்குப்பின் திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக ஓய்வுநிலைக்கு தள்ளப்பட்டதும், பெரிய கட்சியான திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

கருணாநிதிக்குப்பின் திமுக இல்லாமல் போகும் நிலை
தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் கருணாநிதி, ஜெயலலிதா என்கிற தலைவர்களின் மறைவுக்குப்பின் இல்லா நிலை உருவாகும் என்று பலரும் கணக்குப்போட திமுக எனும் கட்சியை ஒருமுகப்படுத்தும் அச்சாணியாக ஸ்டாலின் செயல் தலைவரானார். அப்பா அளவுக்கு இல்லை, கோபக்காரர், அனைவரையும் ஒருமுகப்படுத்த முடியாது, சிறந்த பேச்சாளர் இல்லை என்றெல்லாம் அவரை விமர்சித்தவர்கள் குறித்து அவர் கவலைப்பட்டதில்லை. தனக்கு வந்ததைச் செய்தார், ஆலோசனைகளை கேட்டார், நேரடியாக பல விஷயங்களை யதார்த்தமாக பேசினார்.

52 ஆண்டுகால அரசியல் அனுபவம் திமுகவை வழிநடத்தியது
திமுகவில் கருணாநிதிக்குப்பின் நம்பிக்கைமிக்க தலைவரானார் ஸ்டாலின். கருணாநிதி இல்லாத திமுக, கடந்த கடினமான அரசியல் பாதையில் மூத்த தலைவர்களையும், இளையோரையும் ஒருங்கிணைத்து திமுகவை வழி நடத்துவது கடினமான பணி, ஆனால் 52 ஆண்டுகால கட்சி அனுபவம் ஸ்டாலினுக்கு அது எளிதானது. கருணாநிதியின் மறைவுக்குப்பின் அதே உறுதியாக திமுகவின் அடுத்தக்கட்ட தலைமையாக தானாக அடுத்த நகர்வு அவரை தேடி வந்தது. பெரிய அளவில் எதிர்ப்பு இருக்கும் என நினைத்த நேரத்தில் எளிதாக தலைவர் பதவியை ஏற்றார்.

தந்தைக்கு மெரினாவில் இடம் ஸ்டாலின் நடத்திய சட்டப்போராட்டம்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவின்போது அவரை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் பெற அவர் நடத்திய சட்டப்போராட்டமும், அதற்கு முன்னர் தனது நிலையை விட்டு இறங்கி தந்தைக்காக ஆளும் தரப்பிடம் சமாதானம் பேசியபோதும் ஸ்டாலினின் மதிப்பு உயர்த்தியது, தாழ்த்தவில்லை. சட்டப்போராட்டத்தில் வென்றுக்கொடுத்த வில்சன் எம்பியாக்கப்பட்டதன் மூலம் அந்த நிகழ்வை ஸ்டாலின் எப்படி பார்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

2019 மக்களவையில் பிரம்மாண்ட வெற்றி
திமுக தலைவராக அனைத்து ஜனநாய முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைத்து 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்தித்தார் ஸ்டாலின். கூட்டணிக்கட்சிகளுக்கு சரியான அங்கிகாரம் கொடுக்கப்பட்டது. மத்திய அரசுக்கு எதிரான அலையை சரியாக பயன்படுத்தியதால் திமுக கூட்டணி தமிழகத்தில் 38 இடங்களை கைப்பற்றியது. சட்டப்பேரவையில் கூடுதலாக 9 இடங்களை வென்றது. முதல் வெற்றியை ஸ்டாலின் தலைமையிலான திமுக சுவைத்தது. ஸ்டாலின் திரும்பி பார்க்கப்பட்டார்.

ஆட்சிக்கவிழ்ப்பை விரும்பாத ஸ்டாலின்
அரசியலில் விமர்சனம் என்பதைத்தாண்டி அவதூறு பேசுவதுதான் அரசியல் என்ற நிலையை நோக்கி தற்கால அரசியல் சென்றுக் கொண்டிருக்கிறது. அதில் ஸ்டாலின் அதிகமாக விமர்சிக்கப்பட்டார். அதில் ஒன்று அவர் எந்நாளும் முதல்வராக முடியாது என்பதை குறிப்பிட்டு விமர்சிக்கப்பட்டது. ஆனால் 98 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த ஒருவர் எளிதாக மத்திய அரசுடன் இசைவாக போயிருந்தால் 2019 ஆம் ஆண்டே முதல்வராகியிருக்க முடியும். ஆனால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்க்க எந்நாளும் நான் துணை போக மாட்டேன் என்று அவர் அறிவித்தார்.

8 மாதகால ஆட்சி பெரியளவில் விமர்சனம் இல்லை
இயற்கையாகவே திராவிட இயக்க அரசியல், மாநில சுயாட்சி எண்ணத்தில் ஊறிய அவரும், திமுகவும் அந்தப்பாதையை தேர்வு செய்யவில்லை. ஆட்சியைக் காப்பாற்ற எதையும் செய்யலாம், அப்படி எதையும் செய்பவர்களின் அரசியலே சிறந்தது, சரி என நினைப்பவர்களால், ஸ்டாலின் முதல்வர் பதவிக்காக காத்திருக்கும் இலவுக்காத்தக்கிளி என விமர்சிக்கப்பட்டார். ஆனால் சட்டப்பேரவை தேர்தல் அதை பொய்யாக்கி தனிப்பெரும்பான்மையுடன் ஸ்டாலின் முதல்வர் ஆனார். அவரது தேர்தல் அறிக்கையில் பலவற்றை நிறைவேற்றினார் சிலவற்றை நிறைவேற்ற முடியவில்லை என குறைகள் வைக்கப்பட்டாலும் 8 மாதகால ஆட்சியில் குறையேதும் இல்லை என்று உள்ளாட்சியில் திமுக பெருவெற்றி பெற்றது அவருக்கு மேலும் பலமாக அமைந்தது.

சவாலே சமாளி
தந்தையைப்போல பெரிய பேச்சாளர் இல்லாவிட்டாலும் நிர்வாகத்திறனில் கட்சியை தந்தைக்குப்பின் அதுவும் மிக இக்கட்டான காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லாத கட்சியை ஒற்றை அச்சாணியாக ஸ்டாலின் நிர்வாகித்து வந்தது எதிராளியும் மறுக்க முடியாத உண்மை. மறுபுறம் தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஸ்டாலின் ஆரம்பத்திலேயே சவாலை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

கழகங்கள் இல்லா கோஷம் கலகலத்துப்போனது
தொடர்ச்சியான பல மக்கள் விரோத திட்டங்களுக்காக மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராடவேண்டிய சூழ்நிலை, இதில் ஸ்டாலின் முன்னர் இருந்த நிலையை மாற்றி தந்தையைப்போல் ஒரு நிதானப்பட்ட தலைவராக கூட்டணிக்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் வெற்றிக்கண்டார். இதன்மூலம் தமிழகத்தில் கழகங்கள் இல்லா தமிழகம் என்கிற கோஷத்தை உடைத்து தமிழகத்தில் வலதுசாரி சக்திகள் காலூன்ற ஸ்டாலினின் தலைமை மிகப்பெரிய இடையூறாக உள்ளது எனலாம்.

பக்குவப்பட்ட தலைவராக கூட்டணிக்கட்சிகளை ஒருங்கிணைத்தது
மறுபுறம் திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கங்கள் தூக்கிப்பிடித்த வெகுஜன பிரச்சினை, மதச்சார்ப்பற்ற அரசியல், சமூக நீதி, மக்கள் விரோத அரசியலுக்கு எதிராக ஸ்டாலின் உறுதியாக முன்னெடுத்த போராட்டங்கள் அவருக்கு ஆட்சிப் பொறுப்பையும், இந்தியாவில் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர் என்கிற தோற்றத்தையும் உருவாக்கி தந்துள்ளது. திமுக வெற்றிக்கு மிகப்பெரிய இடையூறாக 2016-ல் திமுக கூட்டணியை விட்டு விலகிய இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அதன் ஜனநாயக அரசியல் அறிந்து கோபப்படாமல் பக்குவப்பட்ட தலைவராக திமுகவுடன் இணைத்துக்கொண்டு மக்களுக்கான போராட்டத்தில் கூட்டாக கொண்டுச் சென்று இன்றும் கூட்டணியை காப்பது சிறந்த தலைவனுக்குரிய பாங்கு என்றே சொல்லலாம்.

அரசியல் தலைவர்களையும் அரவணைக்கும் போக்கு
அதேப்போன்று திமுகவில் தனது வளர்ச்சிக்கு இடையூறு என சொல்லப்பட்ட வைகோ, மதிமுகவை தொடங்கியதும், மக்கள் நலக்கூட்டணி அமைக்க முன் முயற்சி எடுத்ததும், பொது எதிரியான தலைவர் என்பதைத்தாண்டி தனிப்பட்ட விரோதியாகவும் பார்க்கும் சூழல் அமைந்தும், அவரையும் தன்னோடு அரவணைத்து சென்றதும், நீங்கள் நிச்சயம் நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் அதனால் ராஜ்யசபா எம்பியாக செல்லுங்கள் என வைகோவை அன்புக்கட்டளை இட்டு எம்பியாக்கியதும் ஸ்டாலினின் பண்புக்கு எடுத்துக்காட்டு.

தந்தையின் நிர்வாகத்திறனுக்கு இணையாக செயல்படும் போக்கு
கூட்டணிக்கட்சிகளுடன் இணக்கமான செயல்பாடு, மத்திய அரசின் தவறான கொள்கைகளை உறுதியாக எதிர்ப்பது, சமூக நீதியில் உறுதியாக நிற்பது, பெரிய அளவில் விமர்சனம் இல்லாமல் 8 மாதகால ஆட்சி, தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு புதிய சிந்தனையாளர்களை, நிபுணர்களை தமிழக வளர்ச்சிக்காக ஒருங்கிணைப்பது, கட்சிக்குள் கள ஆய்வுக் கூட்டம் நடத்துவது, உடனடி நடவடிக்கை என ஸ்டாலினை வலுவான தலைவராக அடுத்தக்கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல உதவியுள்ளது. தந்தையின் நிதான அரசியலுக்கு நிகராக தன்னை உயர்த்திக்கொண்டுள்ளார் ஸ்டாலின் என்று சொன்னால் அது புகழ்ச்சியாக இருக்காது.

பதவியைத்தாண்டி சமூக நீதி இயக்கம் என்பதில் உறுதி
இன்றைய சூழலில் திமுக என்கிற இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய இயக்கமாக உள்ளது. அதன் தலைவராக ஸ்டாலின் வழிநடத்திச் செல்கிறார். திமுக எந்த வழியில் பயணிக்கவேண்டும் என்பதை மூத்த தலைவர்கள் காட்டிய வழியில் ஸ்டாலின் பயணிப்பது அவரது தலைமைப்பண்பைக்காட்டுகிறது. முதல்வராக 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று பதவி ஏற்றாலும், திமுக ஒரு சமூகநீதி இயக்கம் அதன் தலைவராக ஸ்டாலின் தனது பணியைத் தொடர்வதே சிறப்பான ஒன்று என்கின்றனர் அவரது கட்சியினர்.

இன்றைய சூழலில் திமுக என்கிற இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய இயக்கமாக உள்ளது. அதன் தலைவராக ஸ்டாலின் வழிநடத்திச் செல்கிறார். திமுக எந்த வழியில் பயணிக்கவேண்டும் என்பதை மூத்த தலைவர்கள் காட்டிய வழியில் ஸ்டாலின் பயணிப்பது அவரது தலைமைப்பண்பைக்காட்டுகிறது. முதல்வராக 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று பதவி ஏற்றாலும், திமுக ஒரு சமூகநீதி இயக்கம் அதன் தலைவராக ஸ்டாலின் தனது பணியைத் தொடர்வதே சிறப்பான ஒன்று என்கின்றனர் அவரது கட்சியினர்.
மனிதன் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனக்கு கிடைக்கும் அனுபவத்தால் பண்படுகிறான், தலைவனும் அப்படியே ஸ்டாலினும் தமிழகத்தில் இன்றுள்ள நிலையில் பக்குவப்பட்ட தலைவராக கூட்டணிக்கட்சிகளை அரவணைத்துச் செல்லும் ஜனநாய கட்சியின் தலைவராக மாற்றமடைந்து வருகிறார். சிறந்த நிர்வாகியாக, அதிகம் பேசாத செயலில் காட்டும் நிர்வாகியாக செயல்படுகிறார், அவரது நிதானமான அணுகும் திறன் மக்களால் வரவேற்கப்படுகிறது. இந்த மாற்றம் 2024 ஆம் ஆண்டு நிச்சயம் தேசிய அளவில் வழி நடத்திச் செல்லும் வகையில் மக்கள் அவருக்கு ஒருநாள் வாய்ப்பளிக்கவும் கூடும். எதையும் காலமும், சூழலும், இயற்கையும் தீர்மானிக்கும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications