ராணுவ வீரர் தேர்வு போல் திமுக வேட்பாளர் தேர்வு! குற்றப்பின்னணி இருந்தால் சீட் தராதீர்கள் -ஸ்டாலின்
சென்னை: இராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் திமுக வேட்பாளர்கள் தேர்வு கண்டிப்புடனும், கட்டுக்கோப்புடனும் இருக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
இதேபோல் குற்றப் பின்னணி உள்ளவர்களை திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு சீரியஸான முறையில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக பல்வேறு இடங்களில் இருந்தும் திமுக தலைமைக்கு குவியும் புகார்களை தொடர்ந்து அவர் இவ்வாறு அறிவுறுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
இதனிடையே இது தொடர்பாக ஸ்டாலின் மேலும் கடிதம் மூலம் கூறியுள்ளதாவது;

கொள்கை கூட்டணி
கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் கழகத்தினரின் அணுகுமுறை அவசியம் அமையவேண்டும் என்பதும், வெறும் தேர்தல் கூட்டணியாக இல்லாமல், கொள்கைக் கூட்டணியாக உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தூய தோழமை தொடர்ந்திட வேண்டும் என்பதும் உங்களில் ஒருவனான என் வேண்டுகோளாகும்.

கட்டுக்கோப்பு
கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்தபிறகு, தி.மு.கழகம் போட்டியிட உள்ள இடங்களுக்கான கழக வேட்பாளர்கள் தேர்வு என்பது, இராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் கண்டிப்பானதாகவும் கட்டுக்கோப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கழகத் தலைவர் என்ற முறையில் அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

யாருக்கு முன்னுரிமை?
சுயநலம் தவிர்த்து, பொதுநலச் சிந்தனையும் கொள்கைப் பற்றும் கொண்டு, இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தன்னை முழுமையாகவும் முழுநேரமும் அர்ப்பணித்துக் கொண்ட கழகத்தினருக்கு வேட்பாளர் தேர்வுகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குற்றப் பின்னணி ஏதேனும் இருந்தால், அவை தொடர்பான வழக்குகளில் தன்னை நிரபராதி என்று சட்டப்பூர்வமாக நிரூபிக்கும் வரையில் அவர்களை வேட்பாளராகத் தேர்வு செய்திடல் நிச்சயமாகக் கூடாது என்பதை கழக நிர்வாகிகள் தவறாமல் மனதில் கொள்ள வேண்டும்.

விருப்பு - வெறுப்பு
கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் நடுநிலையுடன் மிகுந்த கவனம் செலுத்தி, வெற்றி வேட்பாளர்களைத் தேர்வு செய்தபிறகு, அந்த வேட்பாளரின் வெற்றிக்கு, கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்கி, ஓய்வின்றி, பயனுள்ள வகையில், பணியாற்ற வேண்டும். சொந்த விருப்பு - வெறுப்புகள் சிறிதளவும் தலையெடுக்க அனுமதிக்கவே கூடாது. கழக வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களைப் போலவே தோழமைக் கட்சியினர் போட்டியிடும் இடங்களிலும் முழுமையான ஒருங்கிணைப்பும், உணர்வுப்பூர்வமான ஒத்துழைப்பும் களப்பணியும் அமைதல் வேண்டும்.












Click it and Unblock the Notifications