சென்னையில் இரண்டாவது விமான நிலையம்.. "இந்த 4 இடங்களில்" எங்கு அமைகிறது? மக்களவையில் தகவல்
சென்னை: சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக 4 இடங்களை மாநில அரசு தேர்வு செய்துள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த கேள்விக்கு விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மக்களவையில் கூறுகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விமான நிலையம் கட்டுமான கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது. இதற்காக மாநில அரசோ விமான நிலைய அதிகாரிகளோ இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
அந்த இடத்தில் விமான நிலையம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட இடத்தில் விமான நிலையம் கட்டுவதற்காக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. வழிகாட்டல் குழுவின் ஒப்புதலுக்காக விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.

மாநில அரசு
பரந்தூர், பண்ணூர், திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்களை மாநில அரசு தேர்வு செய்துள்ளது என்றார். திரிசூலத்தில் ஏற்கெனவே உள்ள சென்னை விமானநிலையத்திற்கு திருப்போரூர் மிக அருகில் உள்ளது. இந்த இரு பகுதிகளுக்குமான பயண நேரம் ஒரு மணி நேரத்தை விட குறைவுதான். ஆனால் பண்ணூர் மற்றும் படாளத்திற்கு திரிசூலத்தில் இருந்து செல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் ஆகும்.

பயண நேரம்
பரந்தூர் திரிசூலத்திலிருந்து அதிக தூரம். பயண நேரம் சுமார் 2 மணி நேரம் ஆகும். கொரோனா தொற்றுக்கு முன்னர் திரிசூலத்தில் இருக்கும் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் மிகவும் நெரிசலாக இருந்தது. இதனால் விமான நிலைய அதிகாரிகளால் போக்குவரத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. பயணிகளும் இந்த நெரிசலில் சிக்கினர். இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டாலும் இறுதி செய்வதில் முடிவு ஏதும் எடுக்கப்படாமல் இருந்தது.

திருப்போரூர்
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் பரந்தூர், பண்ணூர், திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கலாம் என இந்திய விமான நிலைய ஆணையத்திடம் மாநில அரசு தெரிவித்தது. இதையடுத்து இந்த 4 இடங்களையும் விரைவில் அதிகாரிகள் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சாத்தியக்கூறுகளை ஆராயும்.

உள்கட்டமைப்பு
புதிய விமான நிலையம் அமைப்பதற்கு உள்கட்டமைப்பிற்கு தேவையான அனைத்தையும் அமைக்க போதிய இடம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வார்கள். தாம்பரத்தில் உள்ள இந்திய விமான படை போக்குவரத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் உள்ளதா, வேறு ஏதேனும் தடைகள் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்யப்பட்ட பின்னர் இடம் இறுதி செய்யப்படும் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications