பள்ளித் திறந்து 15 நாட்கள் ஆச்சு.. இன்னும் புக்ஸ் தரலை.. பரிதவிப்பில் மாணவர்கள்
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறந்து, 15 நாட்களை கடந்து விட்டது. இருப்பினும் தற்போது வரை 3, 4, 5ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த மூன்றாம் தேதி கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்படும் அன்றையதினமே புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 3, 4, 5ஆம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை இன்னும் அச்சடிக்கும் பணியே முடியவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த 2018-19ஆம் கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அது தற்போது நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து 2, 7, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து 3, 4, 5ஆம் வகுப்புகளுக்கும் இந்தக் கல்வி ஆண்டிலேயே புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். 3, 4, 5ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் அந்த பணிகள் இன்னும் முடிவடையவில்லை.
பச்சை கலர் முண்டாசு.. புலியுடன் போஸ்.. ஹைட்ரோ கார்பன் போராட்டத்துக்கு சிறுவன் அழைப்பு
இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டம் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி புதிய பாடத்திட்ட வடிவமானது கடந்த மாதம்தான் இறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புத்தகம் அச்சடிக்கும் பணியும் தாமதமாகவே தொடங்கப்பட்டுள்ளது. இதனால் 3, 4, 5ஆம் ஆகிய வகுப்புகளுக்குப் பாடப்புத்தகம் வழங்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகள் திறந்து இன்றுடன் 16 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் பாடங்களை படிக்க மாணவர்களுக்கு புத்தகங்கள் இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். கற்றுக் கொடுப்பதற்கு உரிய புத்தகங்கள் இல்லாததால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் வரை ஆசிரியர்கள் www.textbooksonline.tn.nic.in என்ற இணையத்தில் இருந்து பாடங்களை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு கற்றுத்தருமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் பிரதியை, மாணவர்கள் நகல்கள் எடுக்கப் பள்ளிகள் கூறிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நகலெடுக்கும் செலவு பெற்றோர்களை வருத்தப்பட வைத்துள்ளது.
ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க வேண்டிய தினத்திலும் கடும் வெப்பம் இருந்ததால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள் தரப்பிலும் ஆசிரியர்கள் தரப்பிலும் வைக்கப்பட்டது. ஆனாலும் பள்ளிக் கல்வித்துறை அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் பள்ளிகளை திறந்தது. இப்போது பள்ளிகளை திறந்து வைத்துவிட்டு பாடம் நடத்த முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மாணவர்களும் புத்தகங்கள் இல்லாமல் இருப்பதால் படிக்க முடியாமல் இருந்து வருகின்றனர்.
தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் இதர வகுப்பு பாட புத்தகங்கள் சரிவர கிடைக்காததால், பெற்றோர்கள் டிபிஐ வளாகம் நோக்கி குவிந்து வருகின்றனர். பாடநூல் கழக அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து, குழந்தைகளுக்காக பெற்றோர் பாடப்புத்தங்களை வாங்கிச் செல்கின்றனர். "60 முதல் 80 சதவீத புத்தகங்கள் அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள புத்தகங்கள் இம்மாத இறுதிக்குள் அனுப்பப்படும் எனவும் பாடநூல் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.