“பாஜகவின் அதிக முட்டாள்தனம்..” ஆளுநருக்கு ஆதரவாக போஸ்டர் - ட்விட்டரில் சாடிய சுமந்த் ஸ்ரீ ராமன்
சென்னை: தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு தயாரித்து அச்சிட்டு கொடுத்த வார்த்தைகள், வரிகளை வாசிக்காமல் தவிர்த்தது பெரும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், ஆளுநரை பாராட்டி புதுக்கோட்டையில் பாஜகவினர் போஸ்டர் ஒட்டி இருப்பதை விமர்சித்து இருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சுமந்த் ஸ்ரீ ராமன்.
தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையில், "சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இந்த அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்குகிறது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது
தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு ஆதரவாக களமிறங்கிய பாஜக- புதுக்கோட்டையில் போஸ்டர், கோவையில் போலீசில் புகார்!
உரையை மாற்றிய ஆளுநர்
ஆனால் தமிழ்நாடு அரசு அச்சிட்டு கொடுத்த அந்த பத்தியை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் தவிர்த்தார். அதேபோல் தமிழ்நாடு என்று வரும் ஒரு இடத்தில் அதை சொல்லாமல் "திஸ் கவர்மெண்ட்" என்று ஆங்கிலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி படித்ததாகவும், தமிழ்நாடு, திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை அவர் புறக்கணித்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
சட்டம் ஒழுங்கு
அதேபோல், ஆளுநர் உரையில் "தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாண்டு வருவதால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது." என்று குறிப்பிட்டு இருந்த வாசகத்தையும் படிக்காமல் விட்டு உள்ளார் ஆளுநர் ரவி. இதற்கு ஆளுநர் ரவி முன்பாகவே சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
வெளியேறிய ஆளுநர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தன் முன்பே தன்னுடைய பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் தீர்மானத்தை கொண்டு வந்ததால், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளாது. அவர் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
திமுக போஸ்டர்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயல் தேசிய அளவில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ட்விட்டரில் #GetOutRavi பலரும் ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகிறார்கள். அதேபோல் இன்று சென்னையிலும் #GetOutRavi ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் நம்பர் 1 என்று அச்சிடப்பட்ட போஸ்டர்கள் திமுக சார்பில் பல இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளது.
பாஜக போஸ்டர்
இதற்கு போட்டியாக பாஜகவினர் ஆளுநரை வாழ்த்தி புதுக்கோட்டையில் போஸ்டர் ஒட்டி இருக்கின்றன. "ஆளுநரின் ஆளுமையே" என்று குறிப்பிட்டு ஆர்.என்.ரவியை வாழ்த்தி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் என்பவர் இந்த போஸ்டரை ஒட்டி இருக்கிறது.
சுமந்த் ஸ்ரீ ராமன் கருத்து
நேற்று தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டின் காரணமாக தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் திமுக, பாஜக இடையே கருத்து மோதல்கள் வலுத்து வரும் சூழலில், தற்போது போஸ்டர்கள் மூலமாகவும் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுமந்த் ஸ்ரீ ராமன், "தமிழ்நாடு பாஜகவின் அதிக முட்டாள்தனம்" என்று விமர்சித்து உள்ளார்.