ஆரம்பித்த ஆளுநர்.. டக்னு நிமிர்ந்த ஸ்டாலின்.. உதயநிதி ரியாக்ஷன்.. ஜஸ்ட் 2 நிமிஷத்தில் ஒரே ஆச்சரியம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய தினம், ஆளுநர் ஆர்.என். ரவி ஆற்றிய உரை மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது..!!
முந்தைய ஆளுநர்கள் போல, தற்போதைய தமிழக ஆளுநர் ரவி இல்லை.. இந்த முறை திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற நேரம்தான், ரவியும் கவர்னராக புதிதாக இங்கு பொறுப்பேற்றார்.

ஒருவேளை திமுக அரசுக்கு செக் வைப்பதற்காகவே, ஆளுநரின் இந்த நியமனம் நடந்ததாககூட அப்போது பரவலாக முணுமுணுக்கப்பட்டது. அதற்கேற்றபடி, ஆளுநர் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு விவகாரங்களில் தமிழகத்தில் ஒரே பரபரப்புதான்.. ஆளுநர் - மாநில அரசுக்கு இடையே இணக்கமான போக்கும் இல்லாத நிலைமை உள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் நடந்த முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் ரவி, "திராவிட மாடல்", "தமிழ்நாடு" போன்ற வார்த்தைகளை தவிர்த்துவிடவும், அதுவும் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. ஏற்கனவே, ஆளுநர் தரப்புக்கும், தமிழக அரசுக்கும் அதிருப்திகள் நிலவிவந்த நிலையில், கடந்த வருடம் நடந்த இந்த கூட்டத்தொடர் மிகப்பெரிய பிளவையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்திவிட்டு போயிருந்தன.
சட்டசபை: அப்போது முதல், இந்த மோதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.. இந்த ஆண்டு சட்டசபையில் உரையாற்ற, கவர்னர் அழைக்கப்படுவாரா என்ற சந்தேகமும் எழுந்தபடியே இருந்தது.. ஆனால், வழக்கம்போல சட்டசபை கூட்டம், கவர்னர் உரையுடன் துவங்கும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த 1ம்தேதி அதிரடியாக அறிவித்திருந்தார்.
இன்று ஆளுநர் தன்னுடைய உரையில், ''2024ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு தயாரித்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளதால் நான் இந்த உரையை படிக்க விரும்பவில்லை.... நான் ஏற்கனவே கேட்டுக்கொண்ட போதிலும், உரையை துவங்கும் முன் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் இசைக்க வேண்டும்'' என்று கூறி 2 நிமிடத்தில் தன்னுடைய உரையை முடித்தார்.
அத்துடன், பாதியிலேயே அவையை விட்டு வெளியேறியதால், இந்த முறையும் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், ஆளுநர் 2 நிமிடமே பேசினாலும், பலரது கவனத்தையும் இந்த பேச்சு ஈர்த்துள்ளது.
ஆச்சரியம்: காரணம், மிக மிக சரளமாக தமிழில் பேசி அசத்தியிருக்கிறார் கவர்னர் ரவி.. இதை ஒருத்தருமே எதிர்பார்க்கவில்லை.. அனைவருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது..
அவர் பேசுகையில், "மதிப்புக்குரிய சட்டமன்ற தலைவர் அவர்களே, மதிப்புக்குரிய முதலமைச்சர் அவர்களே, மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களே, சட்ட பேரவை அலுவலர்களே, ஊடக நண்பர்களே, தமிழக சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்" என்றார் ஆளுநர் ரவி.
பேச்சுக்கு நடுவில், "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற திருக்குறளையும் வாசித்தார்... இறுதியில் ''வாழ்க பாரதம், வாழ்க ஜனநாயகம், ஜெய்ஹிந்த், நன்றி'' என்றுகூறி உரையை முடித்தார் ஆளுநர்.
வணக்கம்: வழக்கமாக வட மாநில தலைவர்கள், நம்முடைய தமிழகத்துக்கு வருகை தருகிறார்கள் என்றால், மேடைகளில் "வணக்கம்" என்று ஒற்றை வார்த்தையை சொல்லிவிட்டு தங்களுடைய பேச்சை ஆங்கிலத்தில் தொடர்வது வழக்கம்.. பிரதமர் மோடி மட்டும்தான், தன்னுடைய பேச்சுக்களில் அடிக்கடி "திருக்குறளை" நினைவூட்டி பேசிவருகிறார்.. ஆனால், பெரும்பாலான வடமாநில தலைவர்கள், "வணக்கத்தோடு" நிறுத்தி கொள்வார்கள்..
ஆனால் இன்று கவர்னர் தொடக்க உரையை சரளமாகவே தமிழில் ஆரம்பித்தார். அதுவும் கையில் எந்த பேப்பரையும் வைத்து பார்த்து படிக்காமல், சபையில் உள்ள அனைவரையுமே பார்த்து பேசினார். ஆளுநர் தமிழில் ஆரம்பித்ததுமே, முதல்வர் ஸ்டாலின் டக்கென நிமிர்ந்து ஆளுநரை பார்த்தார்.. அதுபோலவே, அவையில் உள்ளவர்களும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.
உதயநிதி: அடுத்த 2 நிமிடத்தில் தன்னுடைய உரையை முடிப்பதாக ஆளுநர் சொல்லும்போதே, அவையில் சலசலப்பு கிளம்பியது. அப்போது எதிர்வரிசையில் இருந்த உறுப்பினர்களை பார்த்து, உதயநிதி, சலசலப்பு கூடாது என்பது போல் தலையை அசைத்து, அவர்களை அமைதிப்படுத்தினார்.
பேசியது வெறும் 2 நிமிஷம்தான் என்றாலும், பலவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி, பெருத்த கவனத்தை கொஞ்ச நேரத்திலேயே ஈர்த்து சென்றுவிட்டார் தமிழக ஆளுநர் ரவி... அந்தவகையில், இயல்பாக பேச முடியாவிட்டாலும், சரளமாக யார் உச்சரித்தாலும், நம்முடைய "தமிழ் மொழி" இனிக்கவே செய்கிறது!!












Click it and Unblock the Notifications