ஆன்லைனில் Indane கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியாமல் 2 நாளாக பொதுமக்கள் அவதி- மாற்று ஏற்பாடுகள் என்ன?
சென்னை: இண்டேன் நிறுவன சிலிண்டர்களை ஆன்லைனில் புக் செய்ய முடியாமல் பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து இண்டேன் சிலிண்டர்களை புக் செய்யும் இதர வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நமது நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ1,000-த்தை கடந்து விற்பனையாகி வருகிறது. கடந்த காலங்களைப் போல இல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உடனுக்குடன் கிடைத்துவிடவும் செய்கிறது. ஆன்லைன், வாட்ஸ் அப், எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு செய்வது, ஆன்லைனிலேயே பணம் செலுத்துவது என வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இணையதளத்தில் இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை புக் செய்ய முடியவில்லை என்பது பொதுமக்களின் புகார். கடந்த 2 நாட்களாக இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஆன்லைனில் புக் செய்ய முடியவில்லை. This site can't be reachedcx.indianoil.in took too long to respond என்பது மட்டுமே பதிலாக கிடைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தவித்து போயுள்ளனர்.
இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி சந்தீப் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் இண்டேன் கேஸ் சிலிண்டர் பதிவு மற்றும் விநியோகம் செய்வதில் கடந்த 2 நாட்களாக பிரச்சனை இருந்தது. தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய ஐபிஎம் மற்றும் ஆரக்கிள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பயனாளர்கள் வழக்கம்போல் தங்களது கேஸ் சிலிண்டர் பதிவை:
எஸ்எம்எஸ் அல்லது ஐவிஆர்எஸ் எண் 77189 55555
மிஸ்டுகால் 84549 55555 அல்லது
வாட்ஸ் அப் மூலம் 75888 88824
விநியோகஸ்தர்களை நேரிடையாகவோ அல்லது கேஸ் பில்லில் உள்ள தொலைபேசி எண் வாயிலாக நுகர்வோர்கள் தொடர்பு கொண்டு மேற்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களின் பதிவு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கூடிய விரைவில் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும்.
இன்று மாலைக்குள் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு நாளை முதல் வழக்கம் போல் சேவைகள் தொடரும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் 84549 55555 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்த வாடிக்கையாளர்களுக்கு எந்த பதிலும் மெசேஜும் வரவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
5000 கார் திருட்டு.. 3 மனைவியுடன் சொகுசு வாழ்க்கை. இந்தியாவின் மிகப்பெரிய திருடன் கைது! பகீர் தகவல்