ஜாக்பாட் கொடுத்த தமிழ்நாடு அரசு! ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட தொகுப்பூதியதாரர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதியப் பணியாளர்கள் கடந்த சில காலமாகவே ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதற்கிடையே தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2021 தேர்தல் அறிக்கை சமயத்தில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் பணியாளர்களுக்குப் பணி நிரந்தர ஆணை வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பணி நிரந்தரம் கோரி தொகுப்பூதியப் பணியாளர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தமிழக அரசு இதுவரை இந்த விவகாரத்தில் முடிவு எதுவும் எடுக்கவில்லை

இதற்கிடையே தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் முழுநேரத் தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஜூன் 1ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அரசுப் பணியில் உள்ள ஓய்வு பெற்ற ஆலோசகர்கள், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊதிய உயர்வு பெற ஓராண்டு பணி அனுபவம் என்பது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications