வாவ்.. "பின்னால் புத்தகம், கையில் மத்தகம்.." கருணாநிதி படத்தை பார்த்து பார்த்து "செதுக்கிய" ஸ்டாலின்
சென்னை: பின்னணியில் புத்தகம்.. கையில் யானையின் மத்தகம்.. என ரசித்து ரசித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் வரையப்பட்டு அது தமிழக சட்டசபையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
இந்த விழாவின்போது சட்டசபைக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும் இந்த விழாவை புறக்கணிப்பதாக கூறி அதிமுக தரப்பிலிருந்து பங்கேற்கவில்லை. அதே நேரம் பாஜக உட்பட அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
16வது தலைவர் கருணாநிதி
சட்டசபைக்குள் உருவப்படம் திறக்கப்படும் மரியாதையை பெறும் 16ஆவது தலைவர் கருணாநிதி ஆகும். இதற்கு முன்பாக 2018ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருந்தார். காமராஜர், அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் என பல முக்கிய தலைவர்களின் படங்கள் அங்கு முன்பு திறந்து வைக்கப்பட்டு இருந்தன.
காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது
இன்று திறந்து வைக்கப்பட்ட கருணாநிதியின் படத்தில் பல சுவாரசியங்கள் இடம்பெற்றுள்ளன. நின்று கொண்டிருக்க கூடிய நிலையில் கருணாநிதியின் உருவ படம் வரைந்து பொருத்தப்பட்டு இருக்கிறது. அதற்கு கீழே , காலம் பொன் போன்றது.. கடமை கண் போன்றது என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. காலத்தை பொன் போல கருதி அல்லும் பகலும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தவர் கருணாநிதி. இதனால்தான் ஓய்வறியா சூரியன் என்று கருணாநிதியை திமுகவினர் புகழ்வது உண்டு. இதற்கு ஏற்ப இந்த வரிகள் அங்கு இடம் பெற்றிருந்தன என்கிறார்கள் அரசு வட்டாரத்தில்.
படத்தில் சுவாரசியங்கள்
திறந்து வைக்கப்பட்ட படத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களும் பல சுவாரசியங்களை தாங்கியது. மஞ்சள் துண்டுடன் கருணாநிதி நின்று கொண்டு இருக்கிறார். அவரது பின்பக்கத்தில் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன . நூல்கள் எழுதுவதோடு, நூல்களை அதிகமாக வாசிக்கும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. அதை இந்த புகைப்படம் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Recommended Video
திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் மீது மிகுந்த பற்று கொண்டவர் கருணாநிதி. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை நிறுவியது, திருக்குறளுக்கு உரை எழுதியது, என பல்வேறு திருவள்ளுவர் சார்ந்த பணிகளில் முன் நின்றவர். தமிழிலக்கியத்தின் தலைமகனாக திருவள்ளுவரை தூக்கிப்பிடித்து கொண்டாடியவர் கருணாநிதி. இந்த புகைப்படத்தில் நூல்களுக்கு அருகே திருவள்ளுவர் சிலை இருப்பது போலவும் வரையப்பட்டிருக்கிறது.
பார்த்து பார்த்து செய்த ஸ்டாலின்
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கவேண்டும்.. கருணாநிதி ஒரு யானையின் தலைமேல் .. அதாவது மத்தகம் பகுதியின் மீது கைவைத்து நிற்பது போல இருக்கிறது படம். சைவம் மட்டுமே சாப்பிடும் யானைகள் யாரையும் துன்புறுத்துவது கிடையாது அதையும் எந்த ஒரு விலங்கும் துன்புறுத்தி விட முடியாது. கருணாநிதியும் அப்படித்தான் , யாருக்கும் அஞ்சாமல், யாரையும் அச்சப்படுத்தாமலும் வாழ்ந்து மறைந்தார் என்பதை எடுத்துக் காட்டுவது போல இந்தப்படம் ரசனையோடு வரையப்பட்டிருக்கிறது என்கிறார்கள். கருணாநிதி உருவ படத்தை வெறும் கடமைக்காக திறக்காமல் இந்த படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் மெனக்கெடல் இருந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் மிகவும் அக்கறை காட்டியிருக்கிறார் என்று திமுக வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.