இயன்ற அளவில் விரைவில் என்பதன் பொருள் இதுதானா? இதுசரிதானா - சபாநாயகர் அப்பாவு சரமாரி கேள்வி
சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என்பதை சம்பந்தப்படாதவர்கள் உணர வேண்டும் என்று சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சென்னை: இயன்ற அளவில் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது என்று சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை 142 நாட்கள் கழித்து மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இயன்ற அளவில் விரைவில் என்பதன் பொருள் இதுதானா? இதுசரிதானா என்றும் சபாநாயகர் சரமாரி கேள்வி எழுப்பினார்.
Recommended Video
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. திமுக , அதிமுக, விசிக, பாமக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சட்டசபையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. சென்னை புனிதஜார்ஜ் கோட்டையில் நடக்கும் சட்டசபைக் கூட்டம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் கடிதத்தை முழுமையாக சபாநாயகர் அப்பாவு வாசித்தார். சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டது என்ன? என்பதையும் சபாநாயகர் அப்பாவு விரிவாக தெரிவித்தார். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, அவசியத்தை உணர்ந்து சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

காரணங்கள் ஏற்புடையதல்ல
நீட் தேர்வு முறையானது, உயிரியல், வேதியியல், இயற்பியலுக்கு மட்டுமே மாநில பாடத்திட்டம் முக்கியத்துவம் கொடுக்கிறது என தமிழக ஆளுநர் குறிப்பிடுள்ளார். தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு அனுப்பிய அறிக்கை ஏற்புடையதாக இல்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார் அப்போது, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று சபாநாயகர் கூறினார்.

சமூக நீதிக்கு எதிரானது
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும் வசதி படைத்தவர்களுக்கு சாதகமானது என்றும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. முக்கிய பாடங்களில் மாணவர் திறனை சோதிப்பதை தவிர்த்து அனைத்து வகை அறிவு என்ற பெயரில் வினோதமான சோதனை முறையை நீட் அறிமுகம் செய்துள்ளது. நீட் தேர்வு மாணவர்களுக்கு உரிய தகுதிக்கு அங்கீகாரம் இல்லை. உயர்மட்ட குழுவின் அறிக்கையை ஆளுநர் ஒருதலைப்பட்சமாக அணுகியுள்ளார்.

இது சரிதானா?
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் ஆனதால் அதுகுறித்து பொதுவெளியில் விவாதிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. இயன்ற அளவில் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. ஆனால் 142 நாட்கள் கழித்து மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இயன்ற அளவில் விரைவில் என்பதன் பொருள் இதுதானா? இதுசரிதானா என்றும் சபாநாயகர் சரமாரி கேள்வி எழுப்பினார்.

பொது வெளியில் வெளியிடலாமா?
சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என்பதை சம்பந்தப்படாதவர்கள் உணர வேண்டும். எனது பணி, கடமையில் இருந்து கடுகு அளவும் விலக மாட்டேன் என்று குறிப்பிட்ட அவர், சபாநாயகர் கட்சி சார்பற்று செயல்பட வேண்டும் என்பதை நான் அறிவேன். ஆளுநரை சட்டப்பேரவையில் விமர்சிக்கக்கூடாது என்று கலைஞர் இருந்தபோது பேரவை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதனை அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications