நீட் தேர்வு: ஆவேசமாக பேசிய அதிமுக எம்எல்ஏ, குறுக்கிட்ட விஜயதாரணி, அமைச்சர் பதிலடி! சட்டசபையில் அமளி
சென்னை: நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடையே, இன்று, காரசார வாதம் நடைபெற்றது.
மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இதன் மீது பேசிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை உறுப்பினர் கோவிந்தசாமி, அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப் பட்டதாக குறிப்பிட்டார்.
மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வாங்கப்பட்டதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு, ஆனால், அந்த மாநிலங்களில் எல்லாம் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவுற்று உள்ளதாக தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
அதேநேரம், தமிழகத்தில் ஒரே ஒரு செங்கல் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வைக்கப்பட்டது. அந்த செங்கலையும் உதயநிதி ஸ்டாலின் எடுத்து வந்து விட்டார் (உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் எய்ம்ஸ் செங்கல் எனக் கூறி ஒரு செங்கலை காண்பித்து குற்றம்சாட்டினார்) கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டு தேர்வு நடத்தப்படாது என்று திமுக கூறியிருந்த வாக்குறுதி என்ன ஆனது என்றார்.

கருணாநிதி, ஜெயலலிதா
இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்ட போது அப்போதைய முதல்வர் கருணாநிதி, நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்துவிட்டது என்றார்.

விஜயதாரணி பேச முயற்சி
அப்போது காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் விஜயதாரணி எழுந்து பேச முயற்சித்தார். அப்போது, காங்கிரஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே சிறிது காரசார வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் அவையில் சில நிமிடங்கள் அமளி காணப்பட்டது.

அதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள்
இதன்பிறகு, பேசிய அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி, தேர்தல் வாக்குறுதியாக திமுக நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறியது என்ன ஆனது என்று, சற்று ஆவேசமாக பேசினார். குறுக்கிட்டு எழுந்த காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார், அதிமுக உறுப்பினரை பதிலுக்கு கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அனைத்து அதிமுக உறுப்பினர்களும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குறுக்கிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் அரசு
இதுகுறித்து மீண்டும் பேசிய விஜயதாரணி, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நீட் கொண்டு வரப்பட்டாலும், விரும்புகின்ற மாநிலங்கள் மட்டும் தேர்வை நடத்தலாம் என்று வசதிகளை வழங்கியிருந்தோம். இப்போது பாஜக அரசு அதை திணிக்கிறது. அதை எடப்பாடி அரசு ஏற்றது என்று பேசினார். தொடர்ந்து நீட் தொடர்பாக ஆவேச விவாதம் நடந்தது.












Click it and Unblock the Notifications