தமிழக அரசின் முதல் இ பட்ஜெட்.. கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே சட்டசபையில் அனுமதி
சென்னை: சட்டசபையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு தீவிரமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் வருவோருக்கு மட்டுமே கலைவாணர் அரங்கில் அனுமதி அளிக்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல்முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது.
காலை 10 மணியளவில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

கலைவாணர் அரங்கு
கொரோனா பரவல் காரணமாகத் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் கடந்த ஆண்டு முதலே சட்டசபை கூட்டங்கள் கலைவாணர் அரங்கில் நடைபெறுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் கலைவாணர் அரங்கில் தான் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது திமுக அரசு கலைவாணர் அரங்கில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது.

கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே குறைந்திருந்தாலும்கூட, கொரோனா 2ஆம் அலை பற்றிய அச்சம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. மத்திய அரசும்கூட கொரோனா பரவலின் தீவிர தன்மையை உணர்த்தும் R factor தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளதாக எச்சரித்திருந்தது. அதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகச் சென்னை பட்டியலிடப்பட்டுள்ளது.

நெகட்டிவ் சான்றிதழ்
இந்தச் சூழலில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால் கலைவாணர் அரங்கில் கடுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா சோதனை மேற்கொண்டு கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் வருவோருக்கே கலைவாணர் அரங்கில் அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இ பட்ஜெட்
சட்டசபை உறுப்பினர்களின் இருக்கைகளும் தனிமனித இடைவெளியைக் கருத்தில் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த பட்ஜெட் முதல்முறையாகக் காகிதமில்லா இ பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் குறித்த அறிவிப்புகளையும் தகவல்களையும் எளிதில் தெரிந்துகொள்ள ஏதுவாக ஒவ்வொரு உறுப்பினர்களின் இருக்கைகளுக்கு முன்னரும் கணினி அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications