தொகுதி குறையுது.. 16 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டது.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 31 இணையர்களுக்கு இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வார்கள். பதினாறு என்றால் பதினாறு குழந்தைகள் அல்ல செல்வங்கள் என்று கூறியதோடு அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, திருக்கோயில்கள் சார்பில் இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்திடும் வகையில் கடந்த 4.12.2022 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மொத்தம் 500 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, 2023-2024 ஆம் அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, "பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50,000/- மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களுடன் 600 இணைகளுக்கு திருமண விழா நடத்தி வைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முதற்கட்டமாக முதலமைச்சர் 7.07.2023 அன்று 34 இணைகளுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

திமுக அரசு பொறுப்பேற்றபின், 2022-2023 ஆம் நிதியாண்டில் 500 இணைகளுக்கும், 2023 2024 ஆம் நிதியாண்டில் 600 இணைகளுக்கும், என மொத்தம் 1,100 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் "பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000/- மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, மணமக்களை வாழ்த்தினார். சென்னை உட்பட மாநிலம் முழுவதும் இன்று மட்டும் மொத்தம் 379 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இணைகளுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, வெட் கிரைண்டர், மிக்சி, குக்கர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்," முன்பெல்லாம், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வார்கள். பதினாறு என்றால் பதினாறு குழந்தைகள் அல்ல, பதினாறு செல்வங்கள். அந்த 16 செல்வங்கள் என்னவென்று கேட்டால் மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், நிலம், வயது, வாகனம், பொன், பொருள், புகழ், பெருமை. அந்த 16 செல்வங்களை பெறுவதற்கு தான் அன்றைக்கு வாழ்த்தினார்கள். இன்றைக்கு, அளவோடு பெற்று வளர்வோடு வாழுங்கள் என்று சொல்கிறோம். ஆனால், இன்றைக்கு நாடாளுமன்ற தொகுதிகளெல்லாம் குறைகிறது என்ற நிலை வரும்போது, நாமும் 16 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாமே என்று சொல்லக்கூடிய நிலைமை வந்துள்ளது" என்றார்.
ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு, இதனால் அதிக குழந்தைகள் பெற்றெடுக்கும் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்க அரசு யோசித்து வருகிறது. இது குழந்தைகள் பெற்றேடுக்க தம்பதிகளை ஊக்கப்படுத்தும். அதுமட்டுமின்றி 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்துக்கு பதில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வருவோம் என பேசியிருந்தார்.
இதேபோல் முதல்வர் ஸ்டாலின் பேசியதாக சமூக வலைதளங்கள் பேச்சுகள் எழுந்தது. அதிக குழந்தைகளை பெற்று எடுக்கும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசவில்லை. பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது போல் தான் பேசினார். ஆனால் சமூக வலைதளங்களில் வேறு மாதிரி விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications