பெட்ரோல் கலால் வரியை உயர்த்தியது ரூ.26.77, குறைத்தது ரூ.14.50.. ஜோக் காட்றீங்களா? காங்கிரஸ் கண்டனம்
சென்னை: பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது போன்று மோடி அரசு ஒரு கண் துடைப்பு நாடகத்தை நடத்தி வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில் செயல்படுவதாக சாடியுள்ளது.
வெந்த புண்ணில் வேல்...ராஜீவ் கொலை வழக்கில் எஞ்சிய 6 தமிழரை விடுதலை செய்ய ஜி.கே.வாசன் எதிர்ப்பு
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
வித்தியாசம் என்ன?
மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து கண் துடைப்பு நாடகத்தை நடத்தியிருக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு 12 தவனைகளில் கலால் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 26.77 மற்றும் டீசலுக்கு ரூபாய் 31.47 ஆக உயர்த்தியுள்ளது. கலால் வரி உயர்த்தியது ரூபாய் 26.77. ஆனால் குறைத்தது
ரூ.14.50 மட்டுமே.
பொறுப்பு துறப்பு
கடந்த மூன்று ஆண்டுகளில் கொரோனா தொற்றினால் கடுமையான பாதிப்பு, வேலை
இழப்பு, வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிற நிலையில் பெட்ரோல்,டீசலுக்கான கலால் வரி மூலம் ரூபாய் 8 லட்சம் கோடி வருவாயை ஈட்டியுள்ளது.மாநில அரசுகள் வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென்று மத்திய நிதியமைச்சர் கூறியிருப்பது பொறுப்பை தட்டி கழிக்கிற செயலாகும்.
பழியை போட்டு
மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருப்பதாக
அறிவித்திருப்பதனால் பெரிய அளவில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றுச் சொன்னால் பெட்ரோல், டீசல் விலையை
கடுமையாக குறைப்பதன் மூலமே அது சாத்தியமாகும். இதை நிதியமைச்சர் புரிந்து
கொள்ளாமல் மாநில அரசுகள் மீது பழி போடுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
பாடம் புகட்டுவார்கள்
அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டர் மே 2014 இல் ரூபாய் 400 ஆக இருந்தது,
இன்று ரூபாய் ஆயிரத்திற்கு மேல்சென்று விட்ட நிலையில் தற்போது ரூபாய் 200
மானியமாக வழங்கப்படுவதால் ரூபாய் 803 ஆக விற்கப்படுகிறது. ஒன்றிய பா.ஜ.க.
அரசால் 84 சதவிகித குடும்பங்களின் வருமானம் குறைந்து கோடீஸ்வரர்களின்
எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசின்
இத்தகைய விரோத நடவடிக்கைகளுக்கு மக்கள் உரிய பாடத்தை விரைவில் புகட்டுவார்கள்.