மக்கள் தலைவரா? குடும்பத்தலைவரா? அதிமுக ஐடி விங் அதிரடி... ஆடிப்போன திமுக
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் களத்தில் இப்போதே அனல் வீச ஆரம்பித்து விட்டது. அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அறிவிக்கப்பட்டது முதலே அதிரடி பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது ஆளும் கட்ச
சென்னை: ஊர் ஊராக போஸ்டர் ஒட்டி பேனர் அடித்து அரசியல் செய்த காலம் மலையேறி விட்டது இப்போது சமூக வலைத்தளங்களில் போஸ்டர் போட்டு அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி முழு வீச்சில் பிரச்சாரத்தில் இறங்கி விட்டது. எடப்பாடி பழனிச்சாமி VS ஸ்டாலின் என்று போஸ்டரை போட்டு செயல் நாயகனா? அறிக்கை நாயகனா? யார் உங்களுக்கு வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அடுத்தடுத்து முதல்வராகவே அதனை கிண்டலடித்த ஸ்டாலின், பாட புத்தகத்தில் முதல்வர் பெயரை போடுவதற்கு கூட குழப்பம் ஏற்படுகிறது என்று சொன்னார். நேற்று ஒரு முதல்வர், இன்றைக்கு ஒரு முதல்வர் என்று சொன்னார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான உடன் ஒரு பேட்டியில் மக்களுக்கு அறிமுகம் இல்லாத முதல்வர் என்று சொன்னார் ஸ்டாலின், கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆகிவிட்டார். விவசாயி முதல்வர் என்ற ட்ரேட் மார்க் அவரது கிரேடை அதிகரித்து விட்டது.
அதிமுக வழிகாட்டு குழுவில் மூத்த நிர்வாகிகளும் புறக்கணிப்பு.. அதிருப்தியில் முக்கிய தலைகள்!
எடப்பாடி பழனிச்சாமி
2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரான பின்னர் சில மாதங்கள் கூட அரியணையில் அமரமுடியவில்லை. உடல் நலக்குறைவினால் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்து பின்னர் மரணமடைந்தார். அவருக்குப் பின்னர் ஓபிஎஸ் நள்ளிரவில் முதல்வரானார். அவரும் சில நாட்களில் பதவியை ராஜினாமா செய்ய எடப்பாடி பழனிச்சாமி திடீர் முதல்வரானார்.
பட்டி தொட்டி எங்கும் பயணம்
வீடியோ கான்பரன்சிங் முதல்வராக மட்டுமல்லாமல் பட்டி தொட்டி எங்கும் பயணம் செய்து மக்களிடம் பிரபலம் ஆனதோடு நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் நேரடியாக சென்று தொடங்கி வைத்தார். ஜெயலலிதாவின் ஆசியோடு நடைபெறும் ஆட்சி என்று கூறினாலும் தனது முகத்தை மக்கள் மனதில் ஆழமாக பதியவைக்க என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்தார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்
2021சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. சில மாத இழுபறிக்கு பின்னர் அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தற்போது முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
எதிர்கட்சிகள் ஏளனம்
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யாராக இருந்தால் என்ன என்பது எதிர்கட்சிகளின் கேள்வியாக உள்ளது. கூட்டணியில் இருக்கும் பாஜகவோ, தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என்று சொல்கிறது அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத அதிமுக முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி விட்டது.
மக்கள் தலைவரா? குடும்ப தலைவரா
அதிமுக ஐடி அணியின் சார்பில் சமூக வலைத்தள பக்கங்களில் போஸ்டர்களை பதிவிட்டு பல கேள்விகளை கேட்டிருக்கின்றனர். யார் வேண்டும் மண்ணின் மைந்தனா? உளறல் மன்னனா? செயல் நாயகனா? அறிக்கை நாயகனா? மண்ணின் மைந்தனா, மன்னரின் மகனா, மக்களில் ஒருவரா? மடாதிபதியா? மக்கள் போராளியா? குடும்பப் போராளியா? உண்மைத்தலைவனா? ஊழல் மன்னனா? விவசாயிகளின் தோழனா? ரவுடிகளின் தோழனா?
மக்கள் தலைவரா? குடும்பத்தலைவரா? கலக்கல் நாயகனா? சொதப்பல் நாயகனா? என்று எடப்பாடி பழனிச்சாமியின் பெருமைகளையும் ஸ்டாலினின் குறைகளையும் சுட்டிக்காட்டி போஸ்ட்போட்டு அதனை டிரெண்டாக்கி வருகின்றார்கள்.
அரசியல் களத்தில் அனல்
2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக திமுக இடையேதான் போட்டியே. கமல், சீமான் இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக திமுகதான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழும். அதிமுக 2011ல் தொடங்கி பத்து ஆண்டு காலமாக ஆட்சிக்கட்டிலில் இருக்கிறது. 2021ஆம் ஆண்டும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என்று கூறி வருகிறது. தமிழக அரசியல் களம் இப்போதே அனலடிக்க ஆரம்பித்து விட்டது.