தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மே மாதம் முழுவதும் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அரசாணை வெள
சென்னை: தமிழகத்தில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்க படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்டவை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில்,தற்போது மறு அறிவிப்பு வரும் வரை அந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்டவை தொடரும் என தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பு 17 ஆயிரத்தை எட்டப்போகிறது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 4,764 பேரும்,செங்கல்பட்டில் 1,219 பேரும் கோவையில் 963 பேரும், திருவள்ளூரில் 751 பேரும், திருநெல்வேலியில் 741 பேரும், தூத்துக்குடியில் 594 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 98 பேர் உயிர் இழந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் தற்போது 1,10,308 பேர் சிகிச்சையில் உள்ளனர். தினமும் கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கல்லூரிகளிலும் கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு மீண்டும் தியேட்டர்கள், மால்கள், கேளிக்கை கூடங்கள், கூட்ட அரங்குகள், பெரிய வணிக வளாகங்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 பேர்களும், இறுதி ஊர்வலம் சார்ந்த சடங்குகளில் 25 பேர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இன்றைய ஆலோசனை கூட்டங்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் ஆகிய 6 மாவட்ட ஆட்சியர்களும் சென்னை, கோவை மாநகராட்சி கமிஷனர்களும் பங்கேற்றனர்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இன்றைய ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்களுடன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் அதுல்யமிஸ்ரா, போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். மே மாதம் ஊரடங்கில் ஏற்படுத்தப்பட வேண்டிய கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்பட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கை சில நாட்களுக்கு அமல்படுத்தலாமா? என்பது குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.
முழு ஊரடங்கை அமல்படுத்தினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் புதிய கட்டுப்பாடுகளை கூடுதலாக கொண்டு வருவது குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு குறித்து அரசு அறிக்கை வெளியிட்டு வருவதால் 1ஆம் தேதியில் இருந்து பின்பற்றப்பட வேண்டிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நீடிக்கும் என்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார். ஞாயிறு முழு லாக்டவுன், வார நாட்களில் இரவு நேர லாக்டவுன் மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தற்போது இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும். ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று சென்னையில் மெட்ரோ ரயில்களை குறைந்த அளவில் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை ஊழியர்கள் மூலம் நடத்த தடையில்லை. பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில் பணியாளர் மட்டும் கலந்து கொண்டு குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்று முகவர்கள், வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications