7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு.. யார், யாருக்கு எந்த முக்கிய பணி தெரியுமா?
சென்னை: 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சி அமைத்தது முதல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மேலும் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஜே.ஆனி மேரி ஸ்வர்ணா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஏ.ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகப் பதவி வகித்து வரும் ஷ்ரவண் குமார் ஜதாவத், வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், அவரை பொது (தேர்தல்) துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் எஸ்.செந்தாமரை, நில நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் மகேஸ்வரி ரவிக்குமார், பொதுப்பணித்துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வரும் எம்.அருணா, கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் எம்.லஷ்மி, சி.எம்.டி.ஏ தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications