மகிழ்ச்சியான செய்தி! 100 நாள் வேலை திட்டத்தில் இனி ஊதியம் ரூ. 319.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!
சென்னை: தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இந்த நிதி ஆண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1,229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்தது.

இந்த திட்டத்தின் பணியாளர்களுக்கான ஊதிய விகிதத்தை மத்திய அமைச்சகம் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் பிரிவு 6(சி)-ன் கீழ் அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகிறது. இந்நிலையில் 100 நாள் வேலைக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான அரசாணையை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியது. தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளொன்றுக்கு தற்போது ரூ.294 வழங்கப்படும் நிலையில் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு, உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அரசாணையில், "மத்திய அதிகாரமளித்தல் குழுவின் கூட்டம் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த 2024-25ம் ஆண்டில் தமிழகத்துக்கு 20 கோடி மனித நாட்களை அனுமதிக்கும் தொாழிலாளர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது.
மேலும், நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.319 ஊதியம் வழங்கவும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, திட்டத்தில் இருந்த நிலுவைத் தொகை உட்பட ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் நிதியை தமிழகத்துக்கு கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மத்திய அரசு ஒதுக்கியது.
இதைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசின் 75 சதவீதம் நிதியான ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் உடன், மாநில அரசின் 25 சதவீத நிதியான ரூ.307 கோடியே 26 லட்சத்து 7,333 என ரூ.1229 கோடியே 4 லட்சத்து 29 ஆயிரத்து 333 ஐ பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும்படி தெரிவித்திருந்தார். இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, அந்த நிதியை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும் நிதி பயன்படுத்தப்பட்டதற்கான சான்றிதழை உரிய விதிகள் படி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications