கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பு! சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.2,950! தித்திக்கும் அறிவிப்பு
சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.2,950 வழங்கப்படும் என்ற தித்திப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.
இது தொடர்பான விவரம் வருமாறு;
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளினால், 2020-21 அரவைப்பருவத்தில் 95,000 எக்டராக இருந்த கரும்புப் பதிவு, 2022-23 அரவைப்பருவத்தில் 1,40,000 எக்டராகவும், கரும்பு அரவை 98.66 இலட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 139.15 இலட்சம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது.
2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் 07.12.2022 அன்று துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளின் விபரத்தை சேகரித்து, கூர்ந்தாய்வு செய்து, சிறப்பு ஊக்கத்தொகையினை விரைவில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்க சர்க்கரைத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுதான் தமிழ்நாடு.. ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருள்-அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்.. மதநல்லிணக்கம்
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.199 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால், பொது, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் 2021-22 அரவைப்பருவத்தில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,950/- கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், சுமார் 1.21 இலட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.