உள்ளாட்சித் தேர்தல்.. மீண்டும் வரலாறு படைத்த திமுக.. ஆளுங்கட்சியை வீழ்த்துவது 2வது முறை!
Recommended Video
சென்னை: அதிமுகவுக்கு என்னதான் மோசமான தோல்வி இல்லை என்று சொன்னாலும் கூட இது பெரும் தோல்வி என்றுதான் சொல்ல முடியும். காரணம், அக்கட்சியை முந்தி அதிக இடங்களில் வென்று விட்டது திமுக. அதை விட முக்கியம், ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு, 2வது முறையாக எதிர்க்கட்சியான திமுகவிடம் அது தோல்வியைச் சந்தித்துள்ளது.
வெற்றியும் தோல்வியும் ஜனநாயகத்தில் ஒரு அங்கம் என்பார்கள். வெல்வது எப்படி இயல்பானதோ அதேபோல தோற்பதும் கூட இயல்பான ஒன்றுதான். அதை எடுத்துக் கொள்ளும் மனப் பக்குவத்தில்தான் அதன் தாக்கம் இருக்கும்.
தமிழகத்தில் பொதுவாகவே ஆளுங்கட்சிதான் இடைத் தேர்தலாக இருந்தாலும் சரி, உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி ஜெயிக்கும் என்ற நிலை இருந்து வந்தது. அது சமீப காலமாக மாறி வருகிறது.
நேர்மையாக வாக்கு எண்ணிக்கை நடந்து இருந்தால்.. கதையே வேறு.. உதயநிதி சொல்லும் செம கணக்கு!
சோர்வில் தொண்டர்கள்
தமிழக சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த 22 தொகுதி இடைத் தேர்தலில் எதிர்க்கட்சியான திமுக பெருவாரியான தொகுதிகளை வென்று ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் அதே மாதிரியான ஒரு தோல்வியை அதிமுக சந்தித்துள்ளது. இது அதிமுகவினரை மனதளவில் சோர்வடைய வைத்துள்ளது.
2வது முறை
தமிழகத்தைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறது. இது தமிழக அரசின் கீழ் செயல்பட்டாலும் கூட சுயேச்சையான அமைப்புதான். இந்த அமைப்பு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை கடந்த 1996ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. அதற்கு முன்பு வரை தமிழக அரசே நேரடியாக நடத்தி வந்தது.
புதிய வரலாறு
தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை ஒருமுறை கூட ஆளுங்கட்சி தோற்றதே இல்லை. திமுக ஆளுங்கட்சியாக இருந்தால் திமுகவும், அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் அதிமுகவும்தான் வெல்லும். வேறு கட்சிகள் வென்றதே இல்லை. இதுதான் இதுவரை இருந்து வந்த வரலாறு. ஆனால் ஆளுங்கட்சியான அதிமுகவை திமுக வீழ்த்துவது இது 2வது முறை என்பது சுவாரஸ்யமான தகவல்.
எம்ஜிஆரை வென்ற கருணாநிதி
அது 1986ம் ஆண்டு. முதல்வராக இருந்தவர் எம்ஜிஆர். கருணாநிதி பிரதான எதிர்க்கட்சித் தலைவர். அப்போது தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 97 நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அதிமுக 58 நகராட்சிகளில் போட்டியிட்டது. அதில் 11 இடங்களில் மட்டுமே வென்றது. திமுக 64 இடங்களை வென்று அதிமுகவை அதிர வைத்தது. மக்கள் எம்ஜிஆர் ஆட்சியால் விரக்திக்குள்ளாகியுள்ளனர் என்று அப்போது தேர்தல் முடிவு குறித்து கருணாநிதி கூறினார். அதேசமயம், ஊரகப் பகுதிகளில் அதிமுகவின் செல்வாக்கு குறையவில்லை. பாதிக்கும் மேற்பட்ட இடங்களை அதிமுக - காங்கிரஸ் கூட்டணியே வென்றது. இங்கு திமுக தோற்றது.
எம்ஜிஆர் கோட்டை தகர்ந்தது
வழக்கமாக தென் மாவட்டங்கள் அதிமுகவுக்கே வாக்களிக்கும். ஆனால் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் திமுக அதிக நகராட்சிகளை வென்றது. மதுரையில் 5 (மொத்தம் 7), கன்னியாகுமரியில் 2 (மொத்தம் 4) என திமுக பெரும் வெற்றி பெற்றது. குமரியில் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதை விட பெரிய அதிர்ச்சியாக வட ஆற்காடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 12 நகராட்சிகளையும் திமுகவே வென்று எம்ஜிஆரை அதிர வைத்தது. அதாவது வன்னியர்களின் வாக்குகளை அப்போதே திமுக தன் வசப்படுத்தி வைத்திருந்தது.
சோ என்ன சொன்னார்
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அப்போது ஜனதாக் கட்சியில் இருந்தவரான சோவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, எதிர்க்கட்சிகளின் வெற்றிக்கான சரியான காரணத்தை என்னால் கூற முடியவில்லை. ஆனால் எம்ஜிஆரின் பிடி தளர்ந்து வருவதை உணர முடிகிறது என்றார். ஆனால் எம்ஜிஆருக்கு அடுத்த இடம் யாருக்கு என்ற சண்டை அப்போது உக்கிரமாக இருந்தது. ஆர்எம்வீ தலைமையில் ஒரு குரூப்பும், ஜெயலலிதா தலைமையில் ஒரு குரூப்பும் மெளன யுத்தம் புரிந்து வந்தனர். பல இடங்களில் சீட் கிடைக்காத கோபத்தில் ஜெயலலிதா ஆதரவாளர்கள் சுயேச்சையாகவும் போட்டியிட்டனர். இந்த மோதலும் கூட அதிமுகவின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.
அசாதாரணமான வெற்றி
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு முறை, ஆளுங்கட்சியான அதிமுகவை திமுக தோற்கடித்து வரலாற்றை மீண்டும் மாற்றி எழுதியுள்ளது. ஆளுங்கட்சியான அதிமுகவை முந்தி திமுக அதிக இடங்களை வென்று விட்டது. இது திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றிதான். காரணம், அமைச்சர்கள் முகாமிட்டும், ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலம் எல்லாவற்றையும் தாண்டி திமுக மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது என்பது அசாதாரணமானது.
பலவீனத்தை பலமாக்கிய திமுக
அதிமுகவைப் பொறுத்தவரை எல்லா சக்தியும் அவர்களிடம் உள்ளது. அதிகாரம், பண பலம், கட்சியின் சின்னம், கூட்டணி பலம் என எல்லாமே உள்ளது. ஆனால் திமுகவிடம் இதை எல்லாம் எதிர்த்து மோதும் நிலையில்தான் அவர்கள் இருந்தனர். இந்த நிலையில் முழுமையாக மக்களைக் கவர அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன என்றே சொல்ல வேண்டும். அதில் அதிமுக தவறி விட்டது.
பெரும் வெற்றி
அதிமுகவைப் பொறுத்தவரை மோசமான தோல்வியைப் பெறவில்லை என்றாலும் கூட 2வது இடம் என்பதும் கூட தோல்விதானே. அந்த வகையில் அதிமுகவுக்கு இது அதிர்ச்சிகரமான ஒன்றுதான். இரட்டை இலை, அமைச்சர்கள், அதிகார பலம் என எல்லா சாதகங்களும் இருந்தும் கூட அதிமுக தோற்றது எப்படி என்ற கேள்விகள் தொண்டர்கள் மனதில் புயலைக் கிளப்பியுள்ளன. அதிமுக தலைமை தொண்டர்களின் கவலையை புறம் தள்ளாமல் நிவாரணத்திற்கு என்ன தேவை என்று பார்ப்பது நல்லது.