தமிழ்நாடு பெயர் மாற்றமும்...எதிர்க்கட்சிகளை மடக்கிய அண்ணா துரையின் சாதுர்யமும்!!
சென்னை: தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ததால் உங்களுக்கு என்ன கிடைத்து விடப்போகிறது என்று எம்பியாக இருந்த அண்ணாதுரையை நோக்கி காங்கிரஸ் உறுப்பினர் எம்.எம். லிங்கம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அண்ணாதுரை, ''லோக் சபா என்று மாற்றினீர்கள், ராஜ்ய சபா என்று மாற்றினீர்கள், பிரசிடென்ட் என்று இருப்பதை ராஷ்டிரபதி என்று மாற்றம் செய்தீர்கள். இதனால் உங்களுக்கு என்ன லாபம் கிடைத்தது'' என்று பதிலடி கொடுத்தார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. அவை அமைதியானது.
மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று அவரது தொண்டர்கள் மட்டுமின்றி கட்சி சார்பு இல்லாதவர்களும் கூறியது உண்டு. அப்படி அவர் பகிர்ந்த சில பொன் மொழிகளையும், அவரது சிறப்புகளையும் பார்ப்போம்.
இந்தியா ஒரே நாடு அல்ல.. இந்தி பொதுமொழி அல்ல.. அன்றே ராஜ்யசபாவில் கர்ஜித்த அண்ணா பிறந்த நாள் இன்று!
மக்கள் உணர்ச்சி
"நாடு என்பது பூகோளப் படம் அல்ல, அங்கு வாழும் மக்களின் உணர்ச்சித் தொகுப்பு; நாடு வாழ, நம்முடைய உழைப்பும் தேவை என்ற உணர்வு எல்லோருக்கும் எழ வேண்டும்" என்று மறைந்த முதல்வர் அண்ணாதுரை முழங்கினார்.
புலிக்குட்டி
சட்டசபையில் ஒருமுறை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து, ''மிருகக்காட்சி சாலைக்கு நான் கொடுத்த ஆண் புலிக்குட்டியை சரியாக கவனிக்கவில்லை, ஆனால், எம்ஜிஆர் கொடுத்த புலிக்குட்டியை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள்'' என்றார். அப்போது எழுந்த அண்ணாதுரை, ''சம்பந்திகள் விஷயத்தில் நான் தலையிட விரும்பவில்லை. நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
சந்திரோதயம்
இவரது சுவாரஸ்யமான பேச்சுகளுக்கு அவரது சந்திரோதயம், சந்திமோகன், போன்ற நாடகங்களை கூறலாம். இந்த நாடகங்களில் அவர் நடித்தும் இருக்கிறார்.
எம்ஜிஆருக்கு பிடித்தது
மூக்குப் பொடி போடுவது அண்ணாதுரைக்கு மிகவும் பிடித்தது. இதை எம்ஜிஆரே ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். அண்ணாவிடம் எனக்கு பிடித்ததே கூட்டங்களில் மேடையில் அமர்ந்து இருக்கும்போது யாரும் பார்த்து விடக் கூடாது என்று லாவகமாக மூக்குப்பொடி போடுவார் என்று தெரிவித்துள்ளார்.
கன்னிப் பேச்சு
இந்திக்கு எதிராக கடுமையாக போராடியவர் அண்ணாதுரை. இதுமட்டுமில்லை திராவிட நாடு கோரிக்கையை அழுத்தமாக வைத்தார். இதனால் இவர் மீது நேருவுக்கு கோபம் என்று கூறுவதுண்டு. ஆனால், எம்பியாக முதன் முறையாக நாடாளுமன்றத்துக்கு சென்று உரையாற்றினார் அண்ணாதுரை. இவரது கன்னிப்பேச்சை கேட்டு நேரு அசந்துவிட்டார் என்று கூறுவதும் உண்டு. அவரது பேச்சை நிறுத்துமாறு சபாநாயகர் கூறியபோது, ''நிறுத்தாதீர்கள், பேச அனுமதியுங்கள்'' என்று நேரு கேட்டுக் கொண்டார்.
மக்களுக்கு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டுமே போதாது. தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியவர் அண்ணா.
பொன் மொழிகள்
- பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்த பிறகு மனிதனிடம் வாதிடுவது என்பது செத்துப் போன மனிதனுக்கு மருந்து ஓட்டுவதற்கு நிகராகும்.
- எதிரிகள் தாக்கித் தாக்கித் தனக்குள் வலுவை இழக்கட்டும்...நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
- போட்டியும், பொறாமையும் பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதியில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே.
- உழைத்து வாழ்வானே வணங்கத்தக்கவன், வாழ்த்துக்குரியவன்; அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுவது சமுதயாத்தின் நல வாழ்வையே புரையோடச் செய்வதாகும்
- நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்...இனி, நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
- கண்டனத்தை தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.