ஆளுநரை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு.. சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய நடவடிக்கை என உறுதி
சென்னை: சட்டசபைக் கூட்டத்தொடர் வரும் 21 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் சட்டசபைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று, நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார்.
Recommended Video
திமுக அரசு பதவியேற்ற பின்னர் தமிழகத்தின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற 21 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை சபாநாயகர் அப்பாவு இன்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி கூடும்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
ஆளுநருடன் சந்திப்பு
இந்த நிலையில்தான், முறைப்படி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சட்டசபைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். சட்டசபைத் துணைத் தலைவர் பிச்சாண்டியும் அவருடன் சென்றார்.
மரபுப் படி அழைப்பு
சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு கூறியதாவது: ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநருக்கு முறையாக அழைப்பு விடுப்பது மரபு. புதிய அரசு அமைந்த பிறகு முதல் கூட்டத்திற்கும் அப்படித்தான் அழைப்புவிடுக்கப்பட வேண்டும். அதன்படி, ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளேன்.
நீட் தேர்வில் விலக்கு
மேலும் கூட்ட தொடர் நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து பரிசீலனையில் உள்ளது. நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து கண்டறிய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார். அதேபோல் பிரதமரையும் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். எனவே விரைவில் நீட் தேர்வு விலக்கு குறித்து ஒரு நல்ல முடிவு வரும்.
அனைவருக்கும் சம வாய்ப்பு
நடைபெற உள்ள சட்டசபைக் கூட்டத்தொடரில் ஜனநாயக முறைப்படி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என்றும், கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது தொடர்பாக அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார்.