1000 வரவே வராது..'இந்த’ தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க! மகளிர் உரிமைத் தொகை புதிய விண்ணப்பத்தில் கவனம்!
சென்னை: தமிழ்நாடு அரசின் திட்டங்களில் மிகவும் வரவேற்பு பெற்ற திட்டம் என்றால் அது மகளிர் உரிமை தொகை திட்டம் தான். தற்போது குறிப்பிட்ட மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் நிலையில் விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உதவித்தொகை மூன்று மாதங்களில் வழங்கப்படும் எனவும் இதற்கான பயனாளிகள் தேர்வு தொடங்கியுள்ளதாகவும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். இதை அடுத்து ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் பட்டியலில் இருந்து புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். சிலர் புதிதாக விண்ணப்பிக்க இருக்கும் நிலையில் விண்ணப்பத்தில் சிறிய தவறு செய்தாலும் பணம் கிடைக்காமல் போய்விட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் மறைந்த பிறகு 2021ல் திமுக தலைவராக தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின். தேர்தலில் வெற்றி பெற திமுக அளித்த வாக்குறுதிகள் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்பட்டது.

குறிப்பாக விடியல் பேருந்து பயண திட்டம், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெரிய அளவில் கை கொடுத்தது. தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்து நிலையில் நிதிநிலை உள்ளிட்டவற்றால் உடனடியாக அந்த திட்டத்தை ஆரம்பிக்கவில்லை.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை:
பின்னர் தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. மேலும் புதிதாக திருமணமானவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
மாதம் 1000 உதவித் தொகை:
இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் தற்போது சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் உரிமை தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 14 இலட்சமாக குறைந்து இருக்கிறது. அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசு பணிகளில் சேர்ந்தவர்கள், உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
தமிழக அரசு:
இந்நிலையில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக திருமணமானவர்கள், புதியதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், பெயர் நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் மேல் முறையீடு செய்தவர்கள் என மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை விரைவில் புதுப்பிக்கப்பட இருக்கிறது. புதிய பயனர்கள் இணைப்பு தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகியிருக்கிறது.
தங்கம் தென்னரசு:
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் விண்ணப்பம் பெறப்பட்டு தகுதியுடைய அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
புதிய விண்ணப்பம்:
வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்குள் புதிய பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கிறது எனவும் ஜூலை மாதம் முதல் அவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கட்டுப்பாடுகள்:
ஆனால் புதிதாக எத்தனை பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது தெரியாத நிலையில் 15 லட்சம் முதல் 30 லட்சம் வரை புதிய பயனாளிகள் சேர்க்கப்படலாம் என கூறுகின்றனர் அதிகாரிகள். மேலும் வருமான வரி செலுத்துபவர்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்கள், சொந்த நிலம் வைத்திருப்பவர்கள், மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் படி பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதே நேரத்தில் சிலர் செய்யும் சிறு தவறுகள் விண்ணப்பத்தினை நிராகரிக்க வாய்ப்பாக அமையும் என எச்சரிக்கின்றனர் அதிகாரிகள்.
மொபைல் எண்:
அதாவது மொபைல் எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை மாற்றிக் கொடுப்பது தவறுதலாக ஒரு எண் மாறுவது ஆகியவற்றால் கூட மகளிர் உதவித் தொகை கிடைக்காமல் போகலாம். தொலைபேசி எண்ணை சரியாக கொடுத்து வங்கி கணக்கு எண்ணை தவறாக கொடுத்தால் மெசேஜ் வரும் ஆனால் பணம் வராது. இ சேவை மையங்கள் மூலமோ அல்லது ரேஷன் கடைகள் மூலமும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? மொபைல் எண். வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என ஆராய்ந்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும். இதனால் தடை படாமல் மகளிர் உரிமைத் தொகை மாதாமாதம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.
யாருக்கு கிடைக்காது?:
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பொருத்தவரை யாருக்கு கிடைக்காது என தெரிந்து கொண்டு விண்ணப்பிப்பது தேவையற்ற அலைச்சலை தவிர்க்கும். அந்த வகையில் 21 வயது நிறைந்த பெண்கள் குடும்ப தலைவிகளாக கருதப்படுவார்கள். அதே நேரத்தில் திருமணம் ஆகாத தனித்து வசிக்கும் பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் குடும்பங்களில் அவர்கள் தலைவியாக கருதப்படுவார்கள்.
மக்கள் பிரதிநிதிகள்:
அதே நேரத்தில் ஐந்து ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய்க்கு அதிகமாக வைத்திருப்பவர்கள், ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் உள்ளவர்கள், 3600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், வருமான வரி செலுத்துவோர், தொழில்வரி செலுத்துவோர், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் ( கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தவிர்த்த) மக்கள் பிரதிநிதிகள் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்க முடியாது:
ஆண்டு ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோரும் விண்ணப்பிக்க முடியாது. கார், ஜீப் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், வாரிய ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications