ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் வரை இனி பேட்டியே கொடுக்க போவதில்லை- தமிழருவி மணியன் திடீர் அப்செட்!
சென்னை: ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் வரை இனி பேட்டியே கொடுக்கப் போவதில்லை என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் ஆலோசகராக உள்ளவர் தமிழருவி மணியன். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் ரஜினிகாந்த் உடன் இணைய நிறைய கட்சிகள் காத்திருக்கின்றன.
குறிப்பாக பாமக இணைய வாய்ப்புள்ளது. அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இருவர் ரஜினியின் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அஞ்சும் ரஜினி
பல கட்சிகளுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். அமமுகவுடன் இணைய ரஜினிகாந்த் விரும்பவில்லை. அந்த கட்சியுடன் இணைந்தால் அவப்பெயர் ஏற்படும் என ரஜினிகாந்த் அஞ்சுகிறார். பாஜகவுடன் கூட்டணி குறித்து ரஜினியே முடிவெடுப்பார். ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகு கட்சி தொடங்குவார் ரஜினிகாந்த்.
ரஜினி கட்சி
பின்னர் ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்துவார். செப்டம்பரில் தமிழகம் முழுவதும் ரஜினி காந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்றார். தமிழருவி மணியனின் கருத்துகளால் ரஜினி காந்த் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். ஆனால் அரசியல் கட்சிகளோ ரஜினியாவது கட்சி தொடங்குவதாவது என்ற நிலையில் உள்ளது.
கேள்வி
இந்த நிலையில் தமிழருவி மணியனின் பேச்சால் வெற்றிவேல் மிகுந்த ஆக்ரோஷமானார். அமமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என சொல்வதற்கு தமிழருவி மணியன் யார்? என கேட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில் கூட்டணிக்காக யாரும் ரஜினி வீட்டு வாசலில் காத்துக் கிடக்கவில்லை. இவர் என்ன ரஜினியின் செய்தித் தொடர்பாளரா என கேள்வி எழுப்பியிருந்தார்.
அறிவிப்பு
இதையடுத்து தமிழருவி மணியன் கூறுகையில் ரஜினி காந்த் கட்சி தொடங்கும் வரை இனி பேட்டியே கொடுக்கப் போவதில்லை. ரஜினிகாந்த் என்ன செய்வார் என சொல்லும் உரிமை தனக்கு இல்லை. தனக்கான வரையறை எது? என அறிந்துள்ளேன். கட்சி தொடங்குவது, மாநாடு குறித்த அறிவிப்பு என அனைத்தையும் ரஜினியே முடிவு செய்வார் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.