இதுதான் மோடியின் சாதனை.. ஸ்டாலின் வந்து பார்க்கணும்.. வடையை கையில் வைத்துக்கொண்டே சொன்ன தமிழிசை!
சென்னை: தென் சென்னை தொகுதியில் இன்று காலையிலேயே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய தமிழிசை சௌந்தரராஜன், வடை கடையில் வடை வாங்கிச் சாப்பிட்டபடி வாக்கு சேகரித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளராக, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். தென் சென்னை தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.

தென் சென்னை லோக்சபா தொகுதியில் களமிறங்கியுள்ள 3 பேருமே மக்களுக்கு நன்கு அறிந்த முகங்கள் என்பதால், தென் சென்னை நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. பாஜக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன் தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தனது பெயரில் அசையும் சொத்துகள் ரூ. 1.57 கோடி என்றும் சொந்தமாக கார் கூட இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் தமிழிசை. மேலும் தலா ரூ.10 லட்சம் மதிப்புள்ள பரிசோதனை இயந்திரம், ஸ்கேன் இயந்திரம் உள்ளதாகவும், கணவர் பெயரில் ரூ. 3.92 கோடி அசையும் சொத்துகள் உள்ளதாகவும் மகள் பெயரில் ஒரு கோடியில் அசையும் சொத்து உள்ளதாகவும் 4 கார்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கோயம்பேட்டில் தள்ளுவண்டி கடையில் வடை சாப்பிட்டு, தனது கட்சியினருக்கும் வடையை பகிர்ந்து கொடுத்தார். மேலும், வடைக்கான காசை செல்போனில் யுபிஐ செயலி மூலம் அனுப்பினார் தமிழிசை. தள்ளுவண்டி கடை வரை டிஜிட்டல் பேமெண்ட் வந்துள்ளதாக கூறி வாக்கு சேகரித்தார்.
ஒரு வடையை கையில் வைத்துக்கொண்டே, "முன்பெல்லாம் பெரிய பெரிய உணவகங்களில் மட்டும் டிஜிட்டல் பேமெண்ட் இருக்கும். தற்போது சிறிய தள்ளுவண்டி கடையில் கூட டிஜிட்டல் பேமெண்ட் முறை இருக்கிறது. இதுவே பிரதமர் மோடியின் முன்னேற்றம், சாதனை" எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தமிழிசை.
தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் பெண்ணிடம் நீங்கள் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் பணம் பெற்றுக்கொள்வது சிறந்த முறை என்று கூறினார். மேலும், கடைக்காரப் பெண்மணிக்கு, அவர் சுட்ட வடையையே வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "அண்ணன் ஸ்டாலின் ஒரே ஒரு முறை இங்கு வந்து பார்க்க வேண்டும். ஸ்டாலின் இங்கு வந்து வடை சுடுவதை பார்க்க வேண்டும். எங்களுக்கு வடை கிடைத்துவிட்டது, உங்களுக்குத்தான் 'வடை போச்சே' நிலைமை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications