சுயேச்சை என்பதாலேயே ஒரு வாக்கு.. தாமரை சின்னத்தில் களமிறங்கியிருந்தால்.. அண்ணாமலை புது விளக்கம்
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் ஒரு வாக்கு பெற்ற நபர் பாஜக சார்பில் போட்டியிடாமல், சுயேச்சையாகக் களமிறங்கினார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். மேலும், வரும் காலத்தில் பாஜக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதேபோல காலியாக இருந்த இடங்களில் இடைத்தேர்தலும் நடைபெற்றது.
புலி வருகிறது கூடலூர் நோக்கி.. 8 நாட்களுக்கு பிறகு.. கேமராவில் பதிவானது.. கிராம மக்களுக்கு வார்னிங்
இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வரை வெலியான முடிவுகளில் பெரும்பாலான இடங்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே முன்னிலையில் உள்ளது. அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் மோசமான ஒரு தோல்வியையே சந்தித்துள்ளது.
கோவை
கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் அருள்ராஜ் என்பவரும் அதிமுக சார்பில் வைத்தியலிங்கம் என்பவரும் போட்டியிட்டனர். இதில் பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இந்த வார்டில் மொத்தம் 1,551 வாக்குகள் இருக்கும் நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகி இருந்தது.
ஒற்றை வாக்கு
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அருள்ராஜே முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் 387 வாக்குகள் பெற்ற அருள்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கு தேமுதிக வேட்பாளர் ரவிக்குமார் 2 வாக்குகளையும். சுயேச்சை போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 1 வாக்கையும் பெற்றுள்ளார். பாஜக இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராக உள்ள கார்த்திக், ஒரே ஒரு ஓட்டை வாங்கி தோல்வி அடைந்தார்.
வாக்கு இல்லை
கார்த்திக் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர் உள்ளதாகவும் அவர்கள் கூட கார்த்திக்கிற்கு வாக்கு அளிக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இருப்பினும், இதனை மறுத்துள்ள பாஜகவின் கார்த்திக், தனக்கும் சரி தனது குடும்பத்திற்கும் 9-வது வார்டில் ஓட்டு இல்லை என விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எனக்கும் என் குடும்ப உறுப்பினர்களுக்கும் அங்கு ஓட்டே கிடையாது. என்னுடைய வார்டு நான்காவது வார்டு, எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் அங்குதான் ஓட்டு உள்ளது.
ஒரு ஓட்டு உண்மைதான்
9ஆவது வார்டு எனக்கு மிகவும் புதியது. முயற்சி செய்து பார்க்கலாம் என்று தேர்தலில் இறங்கினேன். ஒரு ஓட்டு வாங்கியது உண்மை தான். அதையே நாங்கள் வெற்றியாக நினைத்துக் கொள்கிறோம். அடுத்த முறையும் கண்டிப்பாகத் தேர்தலில் களம் காண்பேன். அப்போது ஜெயித்து உங்களைச் சந்தித்துப் பேசுவேன்" என்றார். மேலும், இது குறித்துப் பரவும் அவதூறு செய்தியால் மன உலைச்சலில் உள்ளதாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்ணாமலை பேச்சு
இதற்கிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை ஆளுநரை ஆர் என் ரவியை நேரில் சந்தித்தார். தமிழகத்தில் நடக்கும் வன்முறை மற்றும் ஆணவக் கொலைகளைக் கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் திமுக எம்பிக்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆளுநரிடம் அவர் மனு அளித்தார்.
சுயேச்சையாகப் போட்டியிட்டவர்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஒரு வாக்கு பெற்ற வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பாளர்கள் சுயேச்சையாக நிற்பார்கள். அது வழக்கமான ஒன்று தான். நீங்கள் சொல்லும் அந்த நபர் பாஜகவின் பொறுப்பில் உள்ளனர் தான். அந்த நபர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் சுயேச்சையாகவே களமிறங்கியுள்ளார்
வரும் காலத்தில் வாய்ப்பு
நானும் அவரிடம் தொலைப்பேசியில் பேசினேன். பாஜக தொண்டர்கள் மக்களுக்கு பணியாற்றத் தேர்தலில் களமிறங்குவதை பாஜக வரவேற்கிறது. அவரது உழைப்பு சிறப்பாக இருந்தால், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்கு பெற்ற நபருக்கு அந்த நபருக்கு எதிர்காலத்தில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும். அப்போது அவர் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவார்' என்று அவர் தெரிவித்தார்