முதல்வர் துபாயிலிருந்து வந்ததுமே அதிரடி.. திமுக அரசு அமைந்த பிறகு நடந்த முதல் அமைச்சரவை மாற்றம்
சென்னை: திமுக ஆட்சி அமைந்து 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் முதல்முறையாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப் பெரியளவில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றியது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: என்னென்ன பதவிகள்... எத்தனை மதிப்பெண் - முழு விபரம்
இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் முதல்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்தச் சமயத்தில் முதல்வருடன் சேர்ந்து மொத்தம் 34 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
துபாய் பயணம்
இதற்கிடையே முதல்வராகப் பதவியேற்று 10 மாதங்களுக்குப் பின்னர், தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க கடந்த வாரம் ஐக்கிய அமீரகத்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். துபாய் மற்றும் அபுதாபியில் பல்வேறு நிறுவனங்களின் முக்கிய தலைவர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவான சூழல் குறித்தும் விவரித்தார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவில் தான், முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அமீரகத்தில் இருந்து சென்னை திரும்பினார்.
அமைச்சரவை மாற்றம்
இந்தச் சூழலில் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜ கண்ணப்பனின் இலாகாவை மாற்றி முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சுமார் 11 மாதங்களுக்குப் பின்னர், தமிழக அமைச்சரவை முதல்முறையாக மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர் சர்ச்சை
தமிழக அமைச்சரவை பொறுப்பேற்ற போது, ராஜ கண்ணப்பன் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதற்கிடையே அமைச்சர் ராஜகண்ணப்பன் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய நிலையில், தமிழக அமைச்சரவையில் முதல்முறையாக மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக ஆட்சி
வழக்கமாக அதிமுக ஜெயலலிதா ஆட்சியில் தான், தமிழக அமைச்சரவை அடிக்கடி மாற்றப்படும். ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் சிறு சிறு காரணங்களுக்குக் கூட அமைச்சர்கள் தூக்கி அடிக்கப்படுவார்கள். சில சமயங்களில் அமைச்சரவை எதற்காக மாற்றப்படுகிறது என்று கூட தெரியாது. அமைச்சர்களின் இலகாக்கள் மட்டுமின்றி, அமைச்சர்களே கூட திடீர் திடீரென நீக்கப்படுவார்கள். தாங்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளோம் என்பதைச் செய்தித்தாளில் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறோம்.
திமுக ஆட்சி
திமுக ஆட்சியில் அதற்கு நேர்மாறாகவே இருக்கும். கடந்த காலங்களில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், பெரும்பாலும் அமைச்சரவை மாற்றப்படாது. அதிமுக ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் என்பது சர்வ சாதாரணமாக இருக்கும் நிலையில், திமுக ஆட்சியில் ஓரிரு முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டாலே அது முக்கியமானதாகப் பார்க்கப்படும். அதேபோல திமுக ஆட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்ற விமர்சனமும் இருக்கும்.
முதல்வர் ஸ்டாலின்
அதேநேரம் முதல்வர் ஸ்டாலின் முழுக்க முழுக்க கருணாநிதி பாணி அரசியலைப் பின்பற்ற மாட்டார் என்றே அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் சமிக்ஞையாகவே இந்த இலாகா மாற்றம் பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தீபாவளி இனிப்பு டெண்டனர் தொடங்கிப் பல விவகாரங்களில் ராஜகண்ணப்பன் தொடர்ச்சியாகச் சர்ச்சையில் சிக்கி வந்த நிலையில், அவரது இலாகா மாற்றப்பட்டுள்ளது.
தயங்க மாட்டார்
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்களின் இலாகாவை மாற்றுவது மட்டுமின்றி, அவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கவும் கூட முதல்வர் ஸ்டாலின் தாயாராகவே உள்ளார். திமுகவில் அதிகளவில் இளைஞர்கள் சேர்ந்து வரும் நிலையில், மூத்த அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கும்போது இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் ஸ்டாலின் விரும்புகிறார். கருணாநிதி போல அமைச்சர்களை தங்கள் ஸ்டைலில் பணியாற்ற அனுமதித்தாலும், சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்களை ஜெயலலிதா போல அதிரடியாக மாற்றவும் முதல்வர் தயங்க மாட்டார் என்றே கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.