புத்தம் புது பொலிவு.. 'சிஎம் செல்' வெப்சைட்.. இதிலும் ஆச்சர்யப்படுத்திய ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புத்தம் புது பொலிவினை பெற்றுள்ளது. இணையதளத்தில் மக்கள் தங்கள் கோரிக்கைகள், புகார்களை அனுப்பலாம். அதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெப்சைட்டில் ஆச்சர்யப்படுத்தும் வகையில் இதுவரையிலும் முதலமைச்சர் ஸடாலினின் புகைப்படம் இடம் பெறவில்லை.
முதலமைச்சர் தனிப்பிரிவை பொறுத்தவரை, உங்கள் ஊரின் பொதுவான பிரச்சனைகள், ஆலோசனைகளை அரசுக்கு கோரிக்கையாக அனுப்பலாம். உங்கள் மனு என்றைக்கு ஏற்கப்பட்டது. உங்கள் கோரிக்கையின் மீது எடுக்கப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவை உங்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை, நெடுஞ்சாலை துறை, பத்திரப்பதிவு துறை, வேளாண்துறை, மதுவிலக்கு துறை, மின்சார துறை என தமிழ்நாட்டில் உள்ள எந்த துறை சார்ந்த புகாரையும் மிக முக்கியமானது என்றால் மட்டும் நீங்கள் முதலமைச்ச்ர் தனிப்பிரிவுக்கு அளிக்கலாம்.
பொதுப்பிரச்சனை
பாலம் காட்டுவது, டாஸ்மாக் கடையை அகற்றுவது, பள்ளிகள் கட்டுவது, நூலகம் கட்டுவது, ஆற்றில் சுற்றுச்சுவர் எழுப்புவது, குளங்களை தூர்வாருவது உள்ளிட்ட முக்கிய பொதுப்பிரச்சனையாக இருந்தால் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பலாம். இதேபோல் உங்களுக்கு வேண்டிய உதவிகள் அதாவது அதிமுக்கிய விஷயங்கள் குறித்து மட்டும் கோரிக்கைகள் வைக்கலாம்.
எதற்காக உருவாக்கம்
இது தொடர்பாக அரசு வெளியிட்ட பதிவில், ஒரு பரிவுள்ள அரசு ஏழு தத்துவங்களில் நிலைகொண்டு பணியாற்றுகிறது. அவையாவன, எளிதில் அணுகுதல், சமத்துவமாக நடத்துதல், தொடர்பாடல், பதில் தருதல் , துரிதமாக செயல்படுதல் , திறமையுடன் கையாளுதல் மற்றும் பொறுப்பு ஏற்றல் ஆகியன. இவைகளை உறுதிப்படுத்த வெவ்வேறு பின்னணி கொண்ட பொதுமக்கள் அரசு சேவைகளைப் பெறுவதில் தடையின்மை உருவாக்குதல், தகுதியிருந்தும் தடுக்கப்படும்போது உதவுதல், கோரிக்கைகளை எடுத்துரைக்க வசதி செய்து தருதல், உண்மையான கோரிக்கைகளுக்கு அதற்கேற்ற தீர்வு தருதல் ஆகிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது.
தீர்வு நிச்சயம்
அனைத்து பொதுமக்களுக்கும் அதிமுக்கிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவானது, மாண்புமிகு முதலமைச்சரின் கோரிக்கை தீர்வு குழுவாக செயல்படுகிறது. விதிமுறைகள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகாமல் நியாயமாகவும் பரிவுடனும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்ப ப்பட்டு பதில் நடவடிக்கைகள் இணைய வழி கண்காணிப்பு முறைமை மூலம் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலிருந்தும் உணர்திறனுடன் தேவையான சரியான பயனுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. ஆய்வு கூட்டங்கள் ஒவ்வொறு துறைதோறும் மற்றும் மாவட்டங்கள்தோறும் தொடர்பு அலுவலர்களைக் கொண்டு நடத்தி தாமதங்கள் தவிர்க்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஎம் செல் வெப்சைட்
எப்படி கோரிக்கையை இணையதளத்தில் பதிவு செய்வது என்பதை இப்போது பார்க்கலாம். முதலில் நீங்கள் http://cmcell.tn.gov.in/login.php என்ற முகவரிக்கு என்று உங்கள் முகவரி மற்றும் கடவுச்சொல் மற்றும் அங்கு தோன்றும் பாதுகாப்பு குறியீட்டை பதிவு செய்ய வேண்டும் புதியவர்கள் என்றால் கணக்கை உருவாக்க வேண்டும். கணக்கை உருவாக்கிய பின் கோரிக்கையை தெரிவிக்கலாம். உங்கள் கோரிக்கைக்கு அரசு க்ட்டாயம் பதில் அளிக்கும். மிக கவனிக்க வேண்டியது என்னவென்றால் மிக அதிமுக்கிய பிரச்சனையை மட்டுமே இங்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசு கோரிக்கை வைத்துள்ளது மற்ற பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் அந்தந்த துறை தலைவர்களிடம் தெரிவிக்கலாம்.