23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 50 வயதுக்கு உட்பட்ட 42 பேர் 167 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலையின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலின் வேகம் ஒரு வாரத்தில் 10% மேல் அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவல் படுவேகமாக அதிகரித்து வருவதால், தமிழகத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை அமலுக்கு வரும் நிலையில் வைரஸ் பரவல் மெல்லக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

23 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 23,310 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 21,228 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கூடுதலாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 24 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 12,72,602 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பு
மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 94 பேர், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 73 பேர் என மொத்தம் 167 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று இணை நோய்கள் இல்லா 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 வயதுக்கு உட்பட்ட 42 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் ஒட்டுமொத்த உயிரிழ்பு 14,779 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் வயதானவர்களே உயிரிழப்பதாகச் சொல்லப்பட்ட வந்த நிலையில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்கிறது. தற்போது மாநிலம் முழுவதும் 1,28,311 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து 20,062 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலத்தில் 11,29,512 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
தலைநகர் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6291 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் ஒரே நாளில் 58 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவையில் ஒரே நாளில் 2029 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1755 பேருக்கும், திருவள்ளூரில் 1385 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications