நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு.. மின், குடிநீர் இணைப்புகள் தரப்படாது.. தமிழக அரசு திட்டவட்டம்
சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதாகத் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்ஷேனா தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி அத்துமீற வாய்ப்பு: உயர் நீதிமன்றம் தலையிட ஜெயக்குமார் மனு
ஜிபிஎஸ் கருவி
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள அந்த அறிக்கையில், "ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி, ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்குக் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், சித்தாலபாக்கம் ஏரியைப் பொறுத்தவரைச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில், நீர் நிலைகளின் எல்லைகள் குறித்து சென்னை முழுவதும், ஜிபிஎஸ் (GPS) கருவி மூலம் வரைபடம் தயாரிக்கப்பட்டு, உள்ளூர் அளவில், கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் துறை அதிகாரி, நலச் சங்க உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் எனக் குழு அமைத்து மாதம்தோறும் கண்காணித்து அறிக்கை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சிட்லபாக்கம் ஏரி
நீர்நிலை ஆக்கிரமிப்புகளைக் கண்டறிய ஜிபிஎஸ் கருவி பொருத்தி முன்னோடி திட்டமாக சிட்லபாக்கம் ஏரியில் முதல் கட்டமாக அமல்படுத்த உள்ளோம். மேலும், நீர் நிலைகளை மீட்டு அதைப் பாதுகாப்பது தொடர்பாகக் கொள்கை முடிவு எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நீர் நிலை ஆக்கிரமித்துக் குடியிருந்தவர்களுக்கு மறு குடியமர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கடந்த மாதம் தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
புறம்போக்கு இடங்கள்
ஆக்கிரமிப்பாளர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு தரப்பட மாட்டது என்றும், சம்பந்தப்பட்ட நிலத்தைப் பதிவு செய்வதற்கு முன்னாள் பதிவுத் துறை அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று முடுவெடுக்கபட்டுள்ளது. நீர் நிலை புறம்போக்கு இடங்களில் எந்தவித அரசு அலுவலகங்களும் கட்டப்படக்கூடாது என்றும், முக்கியமான நீர் நிலைகளின் எல்லைகளை நிர்ணயித்து எல்லைக் கற்கள் நடப்படும்.
ஆக்கிரமிப்புகள்
உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 9802. ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, அதில் 5,178 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 210 நீர் நிலைகள் சீரமைக்கப்பட்டு புனரமைக்கப்படும். இதில் 147 நீர் நிலைகள் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் வழங்க மாட்டோம்
ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள இடங்களில் வீட்டு வரி விதிக்கப்பட மாட்டாது, அங்கீகாரம் வழங்கப்படமாட்டாது. தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது" என்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.