அட.. இங்க பாருங்க.. சிட்டி பஸ்களில் பெண்கள், திருநங்கைகளுக்கு வழங்க.. கட்டணமில்லா டிக்கெட் ரெடி!
சென்னை: நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், அவரது உதவியாளர்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கொண்டு வந்துள்ளது
தமிழ்நாட்டில் தி.மு.க அறுதி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது.
தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற முதல் நாளிலேயே முத்தான 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பெண்களுக்கு இலவச பயணம்
இதில் ஒன்றுதான் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்னும் செமையான திட்டம். இந்த திட்டம் பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்கள், விற்பனைக்காக பொருட்களை கொண்டு செல்லும் பெண்களுக்கு இந்த திட்டம் வரப்பிரதாசமாக அமைந்தது.
மிகுந்த வரவேற்பு
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பின் மூலம் பேருந்து கட்டணத்தை மிச்சப்படுத்தி குடும்ப செலவுக்கு பயன்படுத்த முடிவதாக பெண்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருநங்கைகளும் நகர பேருந்துகளில் இலவசமாக செல்லலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும் மாற்றுத்திறனாளிகளும், அவர்களுடன் ஒரு உதவியாளரும் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு கூறியது.
கட்டணமில்லா பயணச்சீட்டு
விரைவில் தமிழ்நாட்டில் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கப்பட உள்ள நிலையில் நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், அவரது உதவியாளர்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கொண்டு வந்துள்ளது. பெண்களுக்கு, மாற்றுத்திறனாளிகள், அவரது உதவியாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வழங்க தனித்தனியாக டிக்கெட் தயாராகி இருக்கிறது
4 விதமான டிக்கெட்
ஒவ்வொரு டிக்கெட்டிலும் '' மாற்றத்தக்கதல்ல. கேட்கும் போது காண்பிக்க அல்லது கொடுக்கப்பட வேண்டும். பரிசோதனைக்கு உட்பட்டது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்ததந்த டிப்போ மணடலங்களின் ஊரும் டிக்கெட்டில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியவுடன் இந்த டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிகிறது. மேற்கண்டவர்கள் நகர பேருந்துகளில் பணம் கொடுக்காமல் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.